India
"மாட்டிறைச்சி சாப்பிடுவதால் பா.ஜ.கவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை": மேகாலயா தலைவர் பேச்சால் சலசலப்பு!
மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு 2017ம் ஆண்டு பசு, காளை, எருது ஆகிய விலங்குகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த உத்தரவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது.
மக்களின் உணவு உரிமையில் எப்படித் தலையிட முடியும் என்ற கேள்வியை பொதுமக்களும், எதிர்கட்சிகளும் எழுப்பினர். மேலும் பல இடங்களில் மாட்டிறைச்சியை விற்பனை செய்தும் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். பின்னர் இந்த உத்தரவில் இருந்து ஒன்றிய அரசு பின்வாங்கியது.
இருந்தாலும், நாட்டில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இந்துத்துவ குண்டர்கள் பலர் பல்வேறு வன்முறை செயல்களிலும், கும்பல் தாக்குதல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு எதிராகப் புகாரளித்தாலும் காவல்துறை மற்றும் அரசுத் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றம் புரிபவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன் என மேகாலயா மாநில பா.ஜ.க தலைவர் எர்னஸ்ட் மவ்ரி பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. இதனால் பா.ஜ.கவினர் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்த அம்மாநில பா.ஜ.க தலைவர் எர்னஸ்ட் மவ்ரி, "மாட்டிறைச்சி சாப்பிடுவதால் பா.ஜ.கவில் எந்த பிரச்சனையும் இல்லை. நானும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன்.
எந்த ஜாதி, மதம், மத நம்பிக்கைகள் பற்றி பா.ஜ.க நினைப்பதில்லை. நாம் எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அது நமது உணவுப் பழக்கம். ஒரு அரசியல் கட்சிக்கு ஏன் பிரச்சனை வரவேண்டும்?
மேகாலாயாவில் அனைவரும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். இங்கு மாட்டிறைச்சிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இது நமது பழக்கம் மற்றும் கலாச்சாரம்" என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன் என எர்னஸ்ட் மவ்ரி பேசியது சட்டமன்ற தேர்தலுக்கானது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் எர்னஸ்ட் மவ்ரியின் பேச்சு பா.ஜ.க தலைமையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!