India

சத்தீஸ்கர்: கையில் கத்தி.. மக்கள் மத்தியில் சாலையில் தரதரவென இழுத்துவரப்பட்ட சிறுமி.. VIDEOவின் பின்னணி ?

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் ஹுடியரி என்ற இடம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் ஓம்கார் திவாரி (47) என்பவர் மளிகை கடை ஒன்று நடித்தி வருகிறார். அவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரும் வேலை செய்து வருகிறார்.

தனது குடும்ப சூழ்நிலைக்காக மளிகை கடையில் வேலை செய்து வரும் சிறுமியிடம் ஓம்கார் ஆபாசமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் சிறுமி தனது குடும்பத்துக்காக வேலையில் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில் சிறுமிக்கும், ஓம்காருக்கும் இடையே சம்பள பண பிரச்னை உருவாகியுள்ளது. தனது சம்பளத்தை சிறுமி கேட்டபோது, அதனை முழுவதுமாக கொடுக்கவில்லை.

இதனால் சிறுமியும் கோபத்தில் சில தினங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்றுள்ளார். வேலைக்கு வருவதை சிறுமி நிறுத்தியதால் எரிச்சலைடைந்த கடைக்காரர் ஓம்கார், சிறுமியின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் சிறுமியை வேலைக்கு அனுப்புமாறும் கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு சிறுமியின் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த கடைக்காரர் ஓம்கார், சம்பவத்தன்று குடிபோதையில் அவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். மேலும் சிறுமியின் குடும்பத்தாரையும் தாக்கியுள்ளார். அதோடு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சிறுமியின் முதுகில் குத்தியுள்ளார். மேலும் இரத்தம் வழிய சிறுமியை நடுரோட்டில் அவரது முடியை பிடித்து தரதரவென இழுத்து வந்துள்ளார்.

அதுவும் பரபரப்பாக இருக்கும் சாலையில் அனைவர் முன்னிலையிலும் இழுத்து வந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள், ஓம்காரை தடுத்து நிறுத்தவில்லை; மேலும் சிறுமியை காப்பாற்ற முயலவும் இல்லை. மாறாக இதுகுறித்து காவல்துறைக்கு ஒருவர் மட்டும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ஓம்காரிடம் இருந்து பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலையை விட்டு நின்றதற்கு ஆத்திரப்பட்ட கடைக்காரர், சிறுமியை கத்தியால் தாக்கி நடுரோட்டில் இழுத்து சென்ற சம்பவம் சத்தீஸ்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு இந்த வீடியோவில் பொதுமக்கள் யாரும் அந்த சிறுமியை மீட்க எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதால் சமூக வலைதளவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: டெலிவரி பாயை கொன்று உடலை 4 நாட்கள் வீட்டில் வைத்திருந்த வாலிபர் : iPhone-னுக்காக நடந்த அதிர்ச்சி சம்பவம்!