India

ரயில் என்ஜின்,தண்டவாளத்தை தொடர்ந்து காணாமல் போன ஓடிக்கொண்டிருந்த சரக்கு ரயில் - மராட்டியத்தில் அதிர்ச்சி!

சில மாதங்களுக்கு முன்னர் பீகார் மாநிலம் பரௌஹ்னி நகரில் க்ரஹாரா என்ற ரயில் நிலையத்தில் பயன்படுத்தாமல் இருந்த டீசல் எஞ்சினை பார்ட் பார்ட்டாக கழற்றி மர்ம நபர்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் கழித்து கடத்த 10 நாட்களுக்கு முன்னர் அதே பீகாரில் உள்ள சமஸ்திபூர் ரயில் நிலையம் அருகே 2 கிலோ மீட்டருக்கு ரயில்வே தண்டவாளம் திருடப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால்,தற்போது நன்றாக ஓடிக்கொண்டிருந்த ஒரு ரயிலே காணாமல் போயுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

PJT1040201 என்ற எண் சரக்கு ரயில் ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் இருந்து கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி 90 கண்டெய்னர்களுடன் மும்பைக்கு புறப்பட்டது. இந்த ரயில் 4 அல்லது 5 நாட்களில் மும்பையை சென்று சேர்ந்திருக்கவேண்டிய நிலையில், தற்போது வரை 15 நாட்கள் ஆன நிலையிலும் இந்த ரயில் மும்பை சென்று சேரவில்லை.

இதன் காரணமாக இந்த ரயில் குறித்த விவரங்களை சேகரித்தபோது அந்த ரயில் காணாமல் போயுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. அந்த சரக்கு ரயில் கசரா ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒம்பர்மலி ரயில் நிலையத்தைக் கடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதன்பின் என்ன ஆனது என்பது குறித்த தகவல் ரயில்வே அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.

சரக்கு போக்குவரத்து ரயில் பெட்டிகளின் இயக்கத்தை கண்காணிப்பதற்கான நிறுவப்பட்டுள்ள கணினிமயமாக்கப்பட்ட FOIS அமைப்பால் கூட இந்த ரயிலின் இருப்பிடத்தை கண்டறியமுடியவில்லை. இதன் காரணமாக பல்வேறு வழிகளில் அந்த ரயிலை கண்டுபிடிக்க ரயில்வே அதிகாரிகள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.

காணாமல்போன ரயிலில் ஏற்றுமதி செய்யவேண்டிய அரிசி, காகிதம், பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் கோடிக்கணக்கான மதிப்புடைய பிற பொருட்களால் நிரப்பப்பட்ட 90 கன்டெய்னர்கள் இருப்பதால் அந்த பொருள்களுக்கு சொந்தக்காரர்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும், இதனால் அவர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: “ஊடகச் சுதந்திரத்தை பாழடித்த மோடி அரசுக்கு மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்..” : முதலமைச்சர் கண்டனம்!