India

அத்துமீறிய இளைஞர்.. சுதாரித்து கொண்ட பெண்ணின் செயலால் துண்டான இளைஞரின் உதடு.. உ.பியில் நடந்தது என்ன ?

உத்தர பிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சம்பவத்தன்று வேலைக்கு வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை கண்ட இளைஞர் ஒருவர், அந்த பெண்ணை பின் தொடர்ந்துள்ளார். தொடர்ந்து அந்த பெண் சென்று கொண்டிருக்கும்போது, அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாமல் இருந்துள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த அந்த இளைஞர் உடனடியாக அந்த பெண்ணை தரதரவென இழுத்து ஒரு புதருக்குள் சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கத்தி கூச்சலிட்டுள்ளார். இருப்பினும் அந்த இளைஞர் அவரை தூக்கி கொண்டு புதருகுகள் சென்றார். பின்னர் அந்த பெண்ணை அடித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் வலுக்கட்டாயமாக பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் சுதாரித்து கொண்ட அந்த பெண், இவரிடம் இருந்து தப்பிக்க ஒரு பிளான் போட்டுள்ளார்.

அதன்படி முதலில் தானே முத்தம் தருவதாக அந்த இளைஞரிடம் கூறியிருக்கிறார். சந்தேகம் இருந்தாலும், தனது ஆசைக்கு பெண் இறங்கியுள்ளது இளைஞருக்கு மகிழ்ச்சியைதான் கொடுத்துள்ளது. எனவே அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி பெண்ணோ அவருக்கு முத்தம் கொடுக்கும்போது, இளைஞரின் உதட்டை வலுக்கட்டாயமாக கடித்து துப்பியுள்ளார்.

இதில் இளைஞரின் உதடு துண்டான நிலையில், அவரது வாயில் இருந்து இரத்தம் வெளியேறித் தொடங்கியது. அதோடு இளைஞரும் வலியால் துடிதுடித்துள்ளார். இளைஞர் அலறிய சத்தம் அந்த பகுதியில் வந்தவர்களுக்கு கேட்டதால், அவர்கள் என்ன ஏது என்று வந்து பார்த்துள்ளார்கள். பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணை பத்திரமாக மீட்டதோடு மட்டுமின்றி, கடிபட்ட இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.

அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இந்த நிகழ்வு குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்தனர். தொடர்ந்து அவர் அந்த இளைஞர் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இந்த இளைஞரை கைது செய்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக இதே மாநிலத்தில் முன்னா - சல்மா என்ற தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் தாய் வீட்டில் தனது குழந்தைகளோடு இருக்கும் சல்மாவை சமாதானம் செய்ய முன்னா அடிக்கடி அங்கு சென்று வருவார். அதோடு குழந்தைகளை காணவும் சென்று வந்துள்ளார். ஆனால் அவரை அங்கே வர வேண்டாம் என்று சல்மா பலமுறை கூறியும், கணவன் முன்னா தனது குழந்தைகளை காண வந்துள்ளார்.

இதனால் ஒருமுறை கடும் ஆத்திரம் கொண்ட சல்மா, தனது கணவன் முன்னாவை சரமாரியாக தாக்கியுள்ளார். அதோடு அவரது நாக்கையும் கடித்து துப்பியுள்ளார். இதில் முன்னாவின் நாக்கு இரண்டு துண்டுகளானது. இதையடுத்து சல்மாவை காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வாடகைக்கு வீடு கேட்பதுபோல் மூதாட்டியிடம் 8 சவரன் நகை கொள்ளை: முதல் திருட்டிலேயே சிக்கிய வாலிபர்கள்!