India

இது OLA பரிதாபங்கள் : பார்ட் பார்ட்டாக ரோட்டில் கழண்டு விழுந்த e-ஸ்கூட்டர் - என்ன நடந்தது ?

உலகம் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கூட மின்சார வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளனர்.

இதனால் பிரபலமான நிறுவனங்களும் மின்சார பைக், கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்தியாவில் ஓலா நிறுவனம் பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளராக திகழ்கிறது. அந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர்களை வாங்க பொதுமக்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் பைக்கை தயாரித்து வரும் நிலையில், அந்த வாகனங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், தீவிபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் அதில் ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக்குகள் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது எலக்ட்ரிக் பைக்கின் முன்பகுதி பார்ட் பார்ட்டாக ரோட்டில் கழண்டு விழுந்ததாக பயனர் ஒருவர் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த அந்த நபர் Ola S1 Pro ரக எலக்ட்ரிக் பைக்குகளை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். அவர் சம்பவத்தன்று தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும்போது திடீரென நடுரோட்டில் பைக்கின் முன்பகுதி பார்ட் பார்ட்டாக ரோட்டில் கழண்டு விழுந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் மதுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த பைக் ஓலா நிறுவனத்தின் ஷோரூமுக்கு எடுத்து செல்லப்பட்டு பழுதுநீக்கி கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிகழ்வை அந்த நபர் சமூக வலைத்தளத்தில் வெளியிட இது வைரலாகியுள்ளது. பலரும் ஓலா நிறுவனத்தை இது தொடர்பாக விமர்சித்து வந்த நிலையில், சில எலக்ட்ரிக் பைக்குகளில் மட்டுமே இது போன்ற பிரச்சனை இருப்பதாக ஓலா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Also Read: “கையில் ஊசி.. பரிதாப நிலைமை..” திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலியானா.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி!