India

“என் மகளுக்கு ஒரு கோடியில் கல்யாணம் பண்ணி வைங்க..” - மனைவியை சுட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர் உருக்கம் !

மத்திய பிரதேச மாநிலம் பன்னா என்ற பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் சேத் - மீனு தம்பதி. ஜவுளித் தொழில் செய்து வரும் இவர்களுக்கு திருமண வயதில் ஒரு மகள் உள்ளார். இவரது குடும்பம் பாகேஷ்வர் தாம் என்பவரது தீவிர பக்தர்கள் ஆவர்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இவரது வீட்டில் இரண்டாவது மாடியில் சஞ்சயும், மீனுவும் இருந்துள்ளனர். அவரது குடும்ப உறுப்பினர்கள் கீழே இருந்துள்ளனர். அப்போது திடீரென்று சுடுவதுபோல் பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறிப்போய் குடும்பத்தினர் மேலே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது மீனுவை அவரது கணவரான சஞ்சய் சுட்டு கொன்றுள்ளார். மேலும் தற்கொலை செய்துகொள்வதாக தன்னை தானே சுட்டுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் இருவரும் கீழே விழுந்து கிடந்த நிலையில், மீனு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால் சஞ்சய் மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

பின்னர் அவரது குடும்பத்தினர் பதறி போய் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பரிதாபமாக பிரிந்தது. தொடர்ந்து இது குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் உடல் கிடந்த இடத்தின் அருகில் தற்கொலை குறிப்பு ஒன்று இருந்துள்ளது தெரியவந்தது.

பாகேஷ்வர் தாம்

இதையடுத்து அதை கைப்பற்றி விசாரிக்கையில் அதில் குருஜி தன்னை மன்னிக்கும்படி குறிப்பிட்டிருந்தது. மேலும் அந்த தற்கொலைக் குறிப்பில், "குருஜி, என்னை மன்னியுங்கள். எனக்கு இன்னொரு பிறவி கிடைத்தால், உங்களின் தீவிர பக்தனாக மட்டுமே இருப்பேன்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் தற்கொலை செய்வதற்கு முன்னர் சஞ்சய் சேத் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தும் தெரியவந்தது. அந்த வீடியோவில் இவரிடம் கடன் வாங்கிய நபரின் பெயரை குறிப்பிட்டு "எனது குழந்தைகளுக்காகவும், என் மகளின் திருமணத்திற்காகவும் எனது பணத்தை தயவு செய்து திருப்பித் தாருங்கள். அவளது திருமணத்தை ரூ. 50 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடியில் ஏற்பாடு செய்யுங்கள்..

என் மகளின் வங்கி கணக்கில் பணம் உள்ளது ரூ. 29 லட்சம் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. நானும் என் மனைவியும் இருவரும் வாழ முடியாமல் போய்விட்டோம். எனது மகள் மற்றும் குழந்தைகளுக்காக அதிக நகைகள் உள்ளது" என்று கதறி அழுதுகொண்டே பேசியிருந்தார்.

இதையடுத்து அவர்கள் தற்கொலை கடிதம் மற்றும் வீடியோவை கைப்பற்றிய காவல்துறையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பன்னா காவல் கண்காணிப்பாளர் தரம்ராஜ் மீனா கூறுகையில், "இது மிகவும் சோகமான சம்பவம்.. நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தற்போது, ​​வெளியாட்கள் யாரும் சம்பந்தப்பட்டது போல் தெரியவில்லை, அந்த அறையில் தம்பதிகள் தனியாக இருந்தனர். நாங்கள் எல்லா கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்." என்றார்.

தனது மகளுக்கு 1 கோடியில் திருமணத்தை ஏற்பாடு செய்யுமாறு தன்னிடம் கடன் வாங்கியவருக்கு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு மனைவியைச் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட தந்தையின் செயல் மத்திய பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: 25 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த மருத்துவர்.. நண்பரின் துக்க நிகழ்விற்கு வந்தபோது நடந்த சோகம்!