India

"அதானி, அம்பானிகளால் ராகுல் காந்தியை விலைக்கு வாங்க முடியாது": நடைபயணத்தில் பிரியங்கா காந்தி பேச்சு!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லியை அடுத்து தற்போது உத்தர பிரதேசத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டியை ஒட்டி நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மீண்டும் உத்தர பிரதேசத்தில் இருந்து ராகுல் காந்தி தனது நடைபயணத்தை தொடங்கினார். அப்போது உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைந்த ராகுல் காந்தியை அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வரவேற்றார்.

இந்த நிகழ்வில் பேசிய பிரியங்கா காந்தி, " என் அன்பு சகோதரரை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். உங்கள் நற்பெயரைக் கெடுக்க ஒன்றிய அரசு ஆயிரக்கணக்கான கோடி செலவு செய்து வருகிறது. ஆனால் நீங்கள் உங்கள் பயணத்தில் இருந்து பின்வாங்கவில்லை.

அதானியும், அம்மானியும் தலைவர்களை விலைக்கு வாங்குகின்றனர். பொது நிறுவனங்களை வாங்குகின்றனர். ஊடகங்களை வாக்குகின்றனர். ஆனால் எனது அண்ணனை அவர்களால் வாங்க முடியவில்லை. அவரை யாராலும் வாங்க முடியாது.

விசாரணை அமைப்புகளை வைத்து எல்லாம் மிரட்டிப்பார்த்துவிட்டார்கள். ஆனால் அவர் ஒரு போர் வீரர் என்பதால் எதற்கும் அஞ்சாதவர் எங்கள் அண்ணன்" என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

Also Read: “அண்ணாமலை ஊடகங்களை உரசிப்பார்க்கும் போக்கை கைவிட்ட வேண்டும்” : கடுமையாக எச்சரித்த சென்னை ப்ரஸ் கிளப் !