India

JEE EXAM : 10-ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் தமிழக மாணவர்களுக்கு மட்டும் விலக்கு !

ஒன்றிய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக ஆண்டுதோறும் JEE நுழைவு தேர்வு நடக்கிறது. இந்தாண்டு நடைபெறும் இந்த நுழைவு தேர்வு வரும் ஜனவரி 24-ம் தேதியில் இருந்து ஒருவாரம் நடைபெறவுள்ளது. இதற்காக மாணவர்கள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.

இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் எளிய முறையில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதற்காக தங்களது 10-ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த 2020-21-ம் கல்வி ஆண்டில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழக அரசு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்தது.

எனவே மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாமலே அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இதனால் அந்த கல்வி ஆண்டில் பயின்ற தமிழக மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மதிப்பெண்கள் பதிவிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கையால், இந்த விவகாரத்தில் மாணவர்களின் நலன் காக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார்.

அதன்படி JEE நுழைவு தேர்வில் 10-ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் தமிழக மாணவர்களுக்கு சிக்கல் உள்ளதால், அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் கோரிக்கையை தேசிய தேர்வு முகமை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி JEE நுழைவு தேர்வு விண்ணப்பத்திற்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் பதிவு செய்ய வேண்டும் என்பதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Also Read: உ.பி : சுரங்கம் தோண்டி 1.8 கிலோ தங்கம் கொள்ளை.. SBI வங்கி கிளையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் !