India

இந்தியாவில் மீண்டும் Mask, Social Distancing: நாளையில் இருந்து அமலாக உள்ள புதிய கட்டுப்பாடுகள் என்ன?

2019ம் ஆண்டு முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உலகமே இதுவரை காணாத இந்த புதிய தொற்றைச் சமாளிக்க முடியாமல் திணறியது.

பிறகு இந்த கொடிய தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற ஊரடங்கு, முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசிகள் என தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கொரோனா போரில் இருந்து தற்போதுதான் மக்கள் மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் புதிய வகை கொரோனா திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளை அச்சமடைய வைத்துள்ளது. இந்தியாவில் குஜராத், ஒடிசா மாநிலத்தில் ஒமிக்ரான் பி.எப்.7 மற்றும் பி.எப்.12 ஆகிய 2 வகை புதிய தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் இந்தியாவில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமலாக உள்ளது.

இது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளும் முழுமையாகத் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். விமானத்தில் மாஸ்க் அணிவது, பயணிகளுக்கிடையே சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்றவேண்டும்.

கொரோனா அறிகுறி இருந்தால் அந்த பயணியை உடனடியாக தனிமைப் படுத்தும் அறைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல வேண்டும். விமானத்திலிருந்து இறங்கும் பயணிகளுக்கும் வெப்ப சோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சர்வதேச விமானத்தில் ராண்டம் முறையில் 2% பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனைக்காக மாதிரியைக் கொடுத்த பின்னர் அந்த பயணிகள் தங்களது வீடுகளுக்கு சொல்லலாம். பரிசோதனை முடிவுகள் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அனுப்பப்படும்.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பயணியை கொரோனா விதிமுறைகளுக்குட்பட்டு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். அதேபோல வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் உடனடியாக கொரோனா அவசர எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 12 வயதுக்குட்ட சிறார்களுக்கு ரேண்டம் பரிசோதனை தேவை இல்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மீண்டும் இந்தியாவில் பரவும் கொரோனா தொற்று.. என்ன செய்யப்போகிறது ஒன்றிய அரசு?