India

“இடஒதுக்கீடு வேண்டும்.. இல்லை, தேர்தலில் பதிலடி கொடுப்போம்”: பாஜகவுக்கு லிங்காயத் சமூகத்தினர் எச்சரிக்கை!

கர்நாடகத்தில் மிகப்பெரிய வாக்கு வங்கியாக திகழ்வது லிங்காயத் சமூகத்தினர். கர்நாடக மாநிலத்தில் உள்ள லிங்காயத் சமூகத்தில் உள்ள 102 பிரிவுகளில் பெரும்பான்மையாக திகழ்பவர்கள் பஞ்சமசாலி வகுப்பினர்கள்.

இந்த வகுப்பினர்கள் தங்களுக்கு 3 டி அடிப்படையில் கொடுக்கப்படும் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, அதிகப்படியாக 2ஏ என்ற பிரிவின் கீழ் தங்களுக்கு இடமளிக்க வேண்டும் என பல வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 4 வருடங்களாக பா.ஜ.க. அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று பெலகாவி மாவட்டத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே பல்லாயிரக்கணக்கான லிங்காயத் தொகுப்பில், பஞ்சமசாலி வகுப்பினர் ஒன்று கூடி பா.ஜ.க அரசுக்கு எதிராக தங்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு அந்த வகுப்பின் மடாதிபதி பசனகவுடா பாட்டில் தலைமையில் நடைபெற்று வருகிறது. மேலும் அவர் பா.ஜ.க அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இன்று நடக்கவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லையெனில் சட்ட மன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக பா.ஜ.க கட்சியை புறக்கணித்து மக்கள் அவர்களுக்கு தண்டனையை வழங்குவார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.