India

எங்ககிட்ட எந்த தகவலும் இல்ல.. ஆன்லைன் சூதாட்டம் குறித்த கேள்விக்கு அலட்சியமாக பதில் சொன்ன ஒன்றிய அரசு!

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டத்தால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை மசோதாவையும் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தடை மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வருகிறார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த வாரம் கூட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சோகம் நடந்துள்ளது.

இந்நிலையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஆன்லைன் சூதாட்டங்களில் எவ்வளவு பணப்புழக்கம் இருக்கிறது என்பதைக் கண்டறிய ஏதேனும் கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதில் அளித்த ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, "ஆன்லைன் சூதாட்டங்களில் இவ்வளவு பணம் புழக்கம் இருக்கிறது என்பது தொடர்பாக எந்த ஒரு கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு நடத்தவில்லை.

ஆன்லைன் சூதாட்டங்களை சட்டப்பூர்வமாக்க ஒன்றிய அரசுக்கு எந்த ஒரு பரிந்துரையும் வரவில்லை. அமலாக்கத்துறை இயக்குனரகம் ஆன்லைன் சூதாட்டம் மூலமாக சட்டவிரோத பண பரிவர்த்தனை மற்றும் ஹவாலா பணப்பரிவர்த்தனை நடைபெற்று இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து ரூ. 212.91 கோடியை நிறுத்தி வைத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: “கைத்தறி பொருட்களுக்கு 5% GST.. மகாத்மா காந்தியை ஒன்றிய அரசு அவமதித்துவிட்டது” : MM.அப்துல்லா பேச்சு!