India

நடுரோட்டில் வாலிபர் வெட்டி படுகொலை.. கர்நாடகாவில் நடந்த அதிர்ச்சி தரும் ஆணவக்கொலை!

கர்நாடக மாநிலம், பாலக்காட் மாவட்டத்திற்குட்பட்ட டக்கோடா கிராமத்தை சேர்ந்தவர் தம்மன்ன கவுடா. இவரது மகள் பாக்யஸ்ரீ. இவர் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த புஜபலி கர்ஜிகி என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

இதுபற்றி தெரிந்த தம்மன்ன கவுடா மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து மகள் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தான் காதலித்த வாலிபரையே திருமணம் செய்துள்ளார். பின்னர் அதே கிராமத்தில் புதிய தம்பதிகள் வாடகைக்கு வீடு எடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையில் மகள் தனது பேச்சை கேட்காமல் வேறு சமுதாயத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்ததால் மகள் மற்றும் மருமகன் மீது கடும் கோவத்தில் தம்மன்ன கவுடா இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று புஜபலி அனுமன் கோவில் திருவிழாவிற்குச் சென்றுவிட்டு, வீட்டிற்கு செல்வதற்கான தனது இருசக்கர வாகனத்தை எடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த தம்மன்ன கவுடா மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் புஜபலியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர் தாங்கள் எடுத்து வந்திருந்த கத்தியை எடுத்து புஜபலியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கொடூர சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பிறகு அங்கு வந்த போலிஸார் புஜபலி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் தலைமறைவாக இருந்து தம்மன்ன மற்றும் அவரது 2 கூட்டாளிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகள் காதலித்து வேறு சமுதாயத்தைச் சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ததால் மருமகனை வெட்டி மாமனார் ஆணவக்கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ‘மனைவியை காணவில்லை..’ போலிஸில் புகார் அளித்த நடிகர்.. வீட்டில் சோதனை செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி !