India

மின்சாரத் திருட்டுக்கு 18 ஆண்டுகள் சிறை.. கண்டனம் தெரிவித்து விடுதலை செய்த நீதிமன்றம்.. பின்னணி என்ன?

உத்தர பிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர் இக்ரம் (42). அந்த பகுதியில் கடை ஒன்றை நடத்தி வரும் இவர், அரசு மின் கம்பத்தில் இருந்து தனக்கு தேவையான மின் இணைப்பை தனது கடைக்கு திருட்டு தனமாக எடுத்து வந்துள்ளார். இக்ரம், சுமார் 3 ஆண்டுகளாக இது போன்ற மின் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததை, கடந்த 2019-ம் ஆண்டு மின்வாரிய அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

தொடர்ந்து புகார் அளித்ததன்பேரில், அவரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், குற்றவாளி இக்ரமிற்கு கடந்த 2020-ம் ஆண்டு ஒவ்வொரு வழக்கிற்கும் 2 ஆண்டுகள் வீதம், மொத்தம் 18 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இக்ரம், சாதாரண மின்சாரத் திருட்டு வழக்குக்காக 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அநீதி என்றும், இதனை மறு பரிசீலனை செய்யும்படியும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் குற்றாவளிக்கு உரிய தண்டனை தான் கீழமை நீதிமன்றம் வழங்கியுள்ளதாக கூறி தள்ளுபடி செய்தது.

இருப்பினும் மனம் தளராத இக்ரம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தலைமை நீதிபதி DY சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டது. அப்போது இது மிகப்பெரிய அநீதி என்றும், குற்றவாளியை விடுதலை செய்யும்படியும் உத்தரவிட்டது. v

இந்த மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், "ஒரு மின்சாரத் திருட்டு வழக்கில் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருப்பதை அநீதியாகும். இதனை ஒரு கொலை குற்றத்திற்கு இணையாக எப்படி பார்க்க முடிகிறது? மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், குற்றவாளி தவறாக தண்டிக்கப்பட்டிருப்பதை கவனித்திருக்க வேண்டும். ஆனால் உயர் நீதிமனறம் கூட இதை கவனிக்காதது வருத்தம் அளிக்கிறது.

மின்சார திருட்டு வழக்கில் குற்றவாளி 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். தற்போது வரையில் அதுவே போதுமானது. 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை ரத்து செய்து, குற்றவாளி இக்ரமை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிடுகிறது" என்றனர்.

Also Read: புதிய விதிமுறை காரணமாக அடுத்தாண்டு முதல் இந்த கார்கள் விற்பனைக்கு வராது - வெளிவந்த பட்டியல் !