India

நள்ளிரவில் கம்பளி போர்வையை திருடவந்த மருத்துவர்.. சுற்றிவளைத்து கைதுசெய்த போலிஸ்.. ராஜஸ்தானின் சோகம் !

ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூரில் தனியார் மருத்துவமனையில் சைலேந்திர குமார் என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு மாதம் ரூபாய் 40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அதே மருத்துவமனையில் துப்புரவு ஊழியராக பணிபுரியும் ராகுல் வால்மீகி என்பவர் வைத்திருந்த கம்பளி சைலேந்திர குமாருக்கு பிடித்திருந்ததால் அது குறித்து கேட்டுள்ளார்.

அப்போது அந்த கம்பளியை தான் திருடிக்கொண்டு வந்ததாக ராகுல் கூறிய நிலையில், தனக்கும் அதேபோல ஒரு கம்பளி திருடித்தருமாறு மருத்துவர் சைலேந்திர குமார் கேட்டுள்ளார். மருத்துவர் கேட்டதால் அதற்கு ராகுலும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்படி தனது நண்பர்கள் 3 பேரோடு இரவில் கம்பளி திருட சென்ற ராகுலோடு மருத்துவர் சைலேந்திர குமாரும் சென்றுள்ளார். அவர்கள் ஒரு இடத்தில் இருந்து கம்பளியை திருடிக்கொண்டிருக்கும்போது சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் கூச்சல் போட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் உள்ளிட்ட 4 பேரும் இருசக்கர வாகனத்தில் அங்கு இருந்து வேகமாக சென்றுள்ளனர். ஒரு கும்பல் இரவில் வேகமாக செல்வதை கண்ட ரோந்து போலிஸார் உடனே அவர்களை துரத்தி ஒரு இடத்தில அவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.

இதில் இருசக்கர வாகனத்தை விட்டு 3 பேர் தப்பித்த நிலையில், மருத்துவர் சைலேந்திர குமார் மட்டும் கோட் சூட் அணிந்த நிலையில் போலிஸாரிடம் சிக்கியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கம்பளியை திருட வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை வேலையில் இருந்து நீக்கி தனியார் மருத்துவமனை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திருடியதாக சந்தேகம்.. லாரி முன் இளைஞரை கட்டிவைத்து 1.5 கி.மீ தூரம் ஓட்டிய DRIVER.. பஞ்சாபில் அதிர்ச்சி!