India

மும்பை: "2 பேர் காவல்.. மற்ற 2 பேர்"-வகுப்பறையை பூட்டி சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சிறார்கள்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மட்டுங்கா என்ற பகுதி உள்ளது. இங்கு இயங்கி வரும் BMC என்ற பள்ளியில் பல்வேறு மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் நடன பயிற்சிக்கு சென்றுள்ளனர். அப்போது அதே வகுப்பில் படிக்கும் 13 வயது சிறுமி ஒரு வகுப்பறையில் தனியே இருந்துள்ளார்.

மாணவி தனியே இருப்பதை கண்ட ஒரு 4 மாணவர்கள் அந்த வகுப்பிற்குள் சென்றுள்ளனர். பின்னர் 2 மாணவர்களை வெளியே காவலில் அமர்த்திவிட்டு மற்ற இரண்டு பேர் வகுப்பறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர். அதோடு அந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மாணவி கதறி அழுதுள்ளார். மேலும் இதனை வெளியே சொல்ல கூடாது என்றும் மாணவர்கள் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. எனவே மாணவி பள்ளியில் இருந்து பாதியிலேயே வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே மாணவி அழுது கொண்டிருப்பதை கண்ட பெற்றோர் இது குறித்து கேட்டுள்ளனர். அப்போது தனக்கு நிகழ்ந்தவையை கதறி அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். இதைக்கேட்டதும் அதிர்ந்த பெற்றோர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட சிறுவர்கள் மீது போக்ஸோ வழக்கில் அதிகாரிகள் வழக்குப்பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை சீர்திருத்தப் பள்ளி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பதைபதைக்க வைத்த ஆபத்தான கடற்பயணம்.. எப்போது தீரும் அகதிகளின் இந்த துயரம் ?