India

பிரிட்ஜில் இருந்த 22 துண்டுகள்.. மகனோடு சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி.. டெல்லியில் மற்றொரு கொடூரம் !

கிழக்கு டெல்லி, பாண்டவ் நகர் பகுதியில் வசித்து வருபவர் பூனம். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே தீபக் என்ற மகன் இருக்கும் நிலையில், இரண்டாவதாக அஞ்சன் தாஸ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளார்.

திருமணம் முடிந்து சில காலம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அஞ்சன் தாஸ் பெண்கள் பிரியராக (Womenizer) இருந்துள்ளார். மேலும் அவருக்கு பல பெண்களுடன் சவகாசம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இவருக்கு தீபக்கின் மனைவி (மருமகள்) மீதும் இவரது பார்வை விழுந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்குள் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கடும் ஆத்திரம் கொண்ட தாயும் மகனும் சேர்ந்து அஞ்சன் தாஸுக்கு மதுவில் மயக்க மறுத்து கலந்து கொடுத்துள்ளனர். பின்னர் அவர் மயக்க நிலைக்கு சென்றதையடுத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

மேலும் அவரது சடலத்தை எப்படி வெளியேற்ற வேண்டும் என எண்ணிய அவர்கள், அவரது சடலத்தை துண்டு துண்டுகளாக வெட்ட நினைத்துள்ளனர். அதன்படி அவரது உடலை 22 துண்டுகளாக வெட்டி வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி வைத்தனர். மேலும் அதனை தினமும் அவ்வப்போது எடுத்துக்கொண்டு காட்டுபகுதி மற்றும் அங்கங்கே எடுத்து வீசியுள்ளனர்.

இந்த நிலையில் மே மாதம் நடந்த இந்த சம்பவத்தில், மனித மாமிசம் குறித்த தகவல் காவல்துறைக்கு கிடைத்துள்ளது. அதன்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த குடும்பம் சிக்கியுள்ளது. மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் மகன் மற்றும் தாய் இடம்பெற்றிருந்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்கள் குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்த நிகழ்வு டெல்லியில் மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இதே டெல்லியில் அப்தாப் என்ற இளைஞர் தன்னுடன் லிவ்-இன்னில் இருந்த ஷரதா என்ற இளம்பெண்ணை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து அவ்வப்போது தூக்கி வீசிய நிகழ்வு அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: டெல்லி 35 துண்டுகளாக வெட்டியெறியப்பட்ட காதலி கொலை வழக்கு.. பெயர் மாற்றி ஆதரவாக பேசிய உ.பி. இளைஞர் கைது !