India

டெல்லி 35 துண்டுகளாக வெட்டியெறியப்பட்ட காதலி கொலை வழக்கு.. பெயர் மாற்றி ஆதரவாக பேசிய உ.பி. இளைஞர் கைது !

திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்திய காதலியை காதலனே கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டியெறிந்துள்ள சம்பவத்தை ஞாயபடுத்தும் விதமாக உ.பி., இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் உள்ள கால் சென்டரில் வேலை பார்த்த ஷர்தா என்ற இளம்பெண்ணுக்கும், அஃப்தாப் அமீன் பூனாவாலா என்ற நபருக்கும் டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

பின்னர் இவர்கள் காதலுக்குப் பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் மும்பையில் இருந்து வெளியேறி டெல்லியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதற்கிடையில், ஷ்ரதா அவருடைய தந்தையுடன் தொலைப்பேசி வாயிலாக அவ்வப்போது பேசி வந்துள்ளார். ஆனால் சில நாட்களாக மகளுக்கு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை; அவரிடம் இருந்து போன் எதுவும் வரவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து அமீனை பிடித்து போலிஸார் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. காதலர்கள் டெல்லி வந்து மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷ்ரதா தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி அமீனிடம் வற்புறுத்தியுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அதே போல் கடந்த மே மாதமும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த அமீன் காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பிறகு போலிஸாரிம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க என்ன செய்வது என்று யோசிக்கையில் ஹாலிவுட் கிரைம் படம் பார்த்து அதன்படி தனது காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டியுள்ளார்.

இதற்காக அவர் புதிய கத்தி, Fridge உள்ளிட்டவையும் வாங்கியுள்ளார். பின்னர் காதலியின் வெட்டப்பட்ட உடலை அதனுள் வைத்துள்ளார். ஆனால் அந்த உடல் பாகங்கள் விரைவில் சுருங்கினால் தான் வெளியே கொண்டு செல்ல முடியும் என்று, இதற்காக கொதிக்கும் தண்ணீரில் ப்ளீச்சிங் பெளடரை போட்டு, அதில் வெட்டப்பட்ட உடல் பாகங்களை வைத்து ஊறவைத்துள்ளார்.

பின்னர் அதனை தனித்தனியே பேக்கிங் செய்து அந்த குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். மேலும் துர்நாற்றம் வராமல் இருக்க வாசனை திரவியம், ஊதுபத்தி உள்ளிட்டவற்றை பயன்படுத்தியுள்ளார். காதலி இறந்த மறுநாளே, அதே டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான வேறொரு பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து தனிமையில் மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.

இதையடுத்து வெட்டப்பட்ட உடல் பாகங்களை 18 நாட்களாக காட்டு பகுதி, மலைப்பகுதி உள்ளிட்டவைகளில் அப்புறப்படுத்தியுள்ளார். அந்த உடல் பாகங்களை ஊறவைக்க சுமார் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீரை அமீன் பயன்படுத்தியுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2020-ம் ஆண்டே அமீன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, காவல்நிலையத்தில் ஷ்ரதா புகார் அளித்திருக்கிறார்.

இந்த கொலை வழக்கு நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில் லிவ்-இன் உறவில் இருந்ததால் இப்படி நேர்ந்தது என பாஜகவை சேர்ந்த தலைவர் ஒருவர் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ஷ்ரதா கொலை வழக்கு தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதற்கு ஆதரவாக பேசி இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தனது பெயர் ரஷீத் கான் என்றும், ஷ்ரதாவை கொலை செய்தது சரி தான் என்றும் பேசியுள்ளார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இவரை கைது செய்ய வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து அந்த நபரை உ.பி போலீசார் கைது செய்த னர்.

பின்னர் அவரிடம் விசாரிக்கையில், அவரது பெயர் ரஷீத் கான் இல்லை என்றும், விகாஷ் குமார் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் உ.பி-யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காதலி துரோகம் செய்துவிட்டதாக விரக்தி.. Facebook நேரலையில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு: பார்த்தவர்கள் பீதி