India

மேம்பாலத்தில் சிக்கிக்கொண்ட விமானம்..அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்.. ஆந்திராவில் பரபரப்பு !

கொரோனா தாக்கம், உக்ரன் போர் போன்ற பொருளாதார சூழ்நிலை காரணமாக உலக அளவில் சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான போக்குவரத்து வர்த்தகம் சமீப காலமாக சரிவை சந்தித்து வருகின்றனர்.

மேலும், சில நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவருவதால் தங்களின் பழைய விமானங்களை விற்பனை செய்து வருகின்றன. இந்த பழைய விமானத்தை வைத்து அதில் ஹோட்டல் நடத்துவது தற்போது பிரபலமான வணிகமாக இருந்து வருகிறது. வெளிநாடுகளில் இதுபோன்ற விமான ஹோட்டல்கள் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.

இந்த நிலையில், அதே பாணியில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனம் ஒன்று பழைய விமானத்தை வாங்கி அதனை ஹோட்டலாக மாற்ற முடிவு செய்தது. இதற்காக கொச்சியில் வைத்து ஒரு பழைய விமானத்தை வாங்கிய அந்த நிறுவனம் அதனை சாலை வழியாக ஹைதராபாத் கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளது.

இதற்காக ராட்சத லாரியில் ஏற்றப்பட்ட விமானம் சாலை வழியே சென்றபோது ஆந்திர மாநிலம் ​​பாபட்லா மாவட்டம் மேதரமெட்லாவில் உள்ள மேம்பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டது. சம்பவம் அறிந்து அந்த பகுதியில் சூழ்ந்த பொதுமக்கள் இதனை கண்டு கழித்ததோடு வீடியோவாகவும் பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டனர்.

மேம்பாலத்தில் இருந்து அந்த விமானத்தை சேதமின்றி மீட்கும் முயற்சியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வரும் நிலையில், அந்த பகுதியில் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வேறு வழியில் விமானம் ஹைதராபாத் கொண்டுவரப்படும் எனவும் பிஸ்தா ஹவுஸ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க போறவர்களுக்கு எச்சரிக்கை.. போலி இணையதளம் மூலம் 1000 பேரிடம் மோசடி !