India

வேகமாக சென்று கொண்டிருந்த இரயில்.. தவறி விழுந்த குழந்தை.. காப்பாற்ற முயன்ற தந்தைக்கும் நேர்ந்த சோகம் !

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தையை காப்பாற்ற முயன்ற தந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் ஹிரா ரெயின் (வயது 32). இவருக்கு திருமணமாகி ஜரீனா என்ற மனைவியும், 3 வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை ஹிரா, அவரது மனைவி ஜரீனா, அவரது மைத்துனர் ஃபிரோஸ் மற்றும் 3 வயது சிறுமி ஆகியோர் டெல்லியில் இருந்து பீகாருக்கு பயணித்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் ஏறிய இரயில் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், வாசல் அருகே நின்று பயணித்துள்ளனர். அப்போது மிர்ஜாமுராட் காவல் வட்டத்துக்கு உட்பட்ட பஹெடா ஹால்ட் அருகே இரயில் சென்றுகொண்டிருந்த சமயத்தில் வாசல் அருகே அமர்ந்திருந்த 3 வயது சிறுமி ஓடும் இரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளது.

இதனைக்கண்டு பதற்றமடைந்த தந்தை உடனடியாக கீழே குதித்து தனது மகளை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனை கண்ட மனைவி, அலறி கதறவே, அருகே இருந்தவர்கள் ஆபத்து என்று செயினை பிடித்து இழுத்து இரயிலை நிறுத்தினர். மேலும் இரயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர் அனைவரும் இரயிலில் இருந்து இறங்கி பார்க்கையில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதனைக்கண்டதும் தாய் குழந்தையை பிடித்து கதறி அழுதார். இதனிடையே கணவரை சென்று பார்க்கையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். பின்னர் விரைந்து வந்த மீட்பு குழுவினர், குழந்தையின் சடலத்தையும், உயிருக்கு போராடி கொண்டிருந்த தந்தையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் ஹிராவை சோதனை செய்த போது, அவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஹிராவின் உறவினர்களுக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தையை காப்பாற்ற முயன்ற தந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: துபாயில் 'புத்தக' வடிவில் பிரம்மாண்ட நூலகம்.. 1000 தமிழ் புத்தகங்கள் : அசத்திய அமைச்சர் அன்பில் மகேஸ்!