India

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர்.. மனைவிக்கு அனுப்பிய Whatsapp ஆடியோ: புதுச்சேரியில் நடந்த சோகம்!

புதுச்சேரியின் எல்லைப்பகுதியான திருக்கானூர் அருகே உள்ள சோம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (28). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகின்றார்.

மேலும் இரவுப்பணி என்றால் அய்யனார் நகரப்பகுதியில் உள்ள ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்குவது வழக்கம். இதனிடையே நேற்று இரவு பணி முடிந்து அறைக்கு வந்த நிலையில், நள்ளிரவில் அய்யனார் நைலாம் கயிறு மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து சக ஊழியர்கள் அவரது தந்தையான அரிக்கிருஷ்ணனிடம் தகவல் தெரிவித்ததை அடுத்த, அவர் ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், நேற்று மாலை அய்யனாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதனிடையே போலிஸார் நடத்திய விசாரணையில் அய்யனார் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவரது மனைவிக்கு அவர் பேசி அனுப்பிய ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது.

அதில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தாதால், தற்கொலை செய்து கொண்டதாகவும், மேலும் தற்கொலை செய்துகொண்ட அன்று கூட ரூ.50 ஆயிரம் இழந்ததாக அழுதுகொண்டே பேசிய அவர், ஆன்லைன் விளையாட்டை விடாலாம் என நினைத்தாலும் விடமுடியவில்லை என்பதால் தற்கொலை செய்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் விளையாட்டின் மூலம் இளைஞர் பணத்தை இழந்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக பணத்தை இழந்த சென்னை இளைஞர் - விபரீத முடிவு எடுத்த சோகம்!

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”