India

விடாமல் துரத்திய குரங்குகள்.. பதற்றத்தில் விவசாயி செய்த காரியத்தால் நேர்ந்த சோகம்.. உ.பி-யில் அதிர்வலை !

குரங்குகள் கூட்டம் துரத்தியதால், பதற்றமடைந்த விவசாயி மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ள சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலம், பரேலியில் பகுதியில் மாடி வீட்டில் வசித்து வருபவர் முகேஷ் குமார். 40 வயதாகும் இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் வழக்கமாக அவரது வீட்டு மொட்டை மாடியில் தூங்குவார். அப்படி சம்பவத்தன்றும் முகேஷ் மொட்டை மாடியில் தூங்கியுள்ளர்.

அப்போது அங்கே திடீரென்று நுழைந்த குரங்குகள் முகேஷ் குமாரை பயமுறுத்தியுள்ளது. மேலும் அவரை தாக்கவும் முயன்றுள்ளது. இதில் பெரிதளவில் பயந்து போன முகேஷ், அங்கே இங்கே ஓடியுள்ளார். இருப்பினும் வழிமறித்து மீண்டும் மீண்டும் துரத்தியதால் வேறு வழியில்லாத முகேஷ், கால் இடறி மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டின் வெளியில் வந்து பார்த்த உறவினர்கள், முகேஷ் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், கை, கால், உடல் முழுவதும் அடிபட்டதோடு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

மேலும் பலத்த காயமடைந்த முகேஷிற்கு மருத்துவமனை தீவிர சிகிச்சை அளித்துவந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இது குறித்து காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது குரங்குகள் இவரை தள்ளி விட்டதா அல்லது இவரே தவறுதலாக கீழே விழுந்தாரா என்ற கண்ணோட்டத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக இந்த பரேலி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரங்குகள் கூட்டம் அதிகரித்து பொதுமக்களை விரட்டி துரத்தி கடித்துள்ள சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குரங்கு கூட்டம் ஒன்று தந்தையின் கையிலிருந்து 4 மாத குழந்தையை பறித்துக்கொண்டு பின்னர் கூரையில் இருந்து கீழே வீசியது. இந்த சம்பவத்தில் 4 மாத குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘சூடு வைத்து கொடுமை’ - குழந்தையை பார்த்துக்கொள்வதாக கூறி கொலை செய்த தம்பதி.. அதிரடியாக கைது செய்த போலிஸ்!