India

கண்ணில் மிளகாய் போடி தூவி வழிப்பறி- புது மனைவி முன்னிலையில் கணவருக்கு நேர்ந்த சோகம்: ஆந்திராவில் பரபரப்பு

நகையை தர மறுத்ததால், புதுமண மனைவி முன்னிலையில் வழிப்பறி கொள்ளையர்கள் கணவரை கத்தியால் குத்தி கொன்றுள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூரை அடுத்துள்ள நெக்குண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தாமு (வயது 25). இவருக்கும் அனுராதா (வயது 23) என்ற இளம்பெண்ணுக்கு சமீபத்தில் திருமணமானது. இந்த நிலையில் புதுமண தம்பதியினர் அவ்வப்போது வெளியே செல்வது வழக்கமாக இருந்துவந்துள்ளது.

அந்த வகையில் சம்பவத்தன்று தாமு, தனது மனைவி மற்றும் மாமியாரை அழைத்து கொண்டு பைக்கில் வெளியே சென்றுள்ளார். அப்போது தூர்லப்பள்ளி அருகே கொத்தகுண்டவம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத 3 நபர்கள் வந்துள்ளனர். அங்கே வந்து அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் நகைகளை மிரட்டியுள்ளனர்.

அவர்கள் மிரட்டலுக்கு பயப்படாத தாமு, எதையும் கொடுக்க முடியாது என்று அவர்களிடம் தைரியமாக பேசியுள்ளார். மேலும் சத்தம் போட்டுள்ளார். இதனால் கோபமடைந்த கொள்ளையர்களின் ஒருவர், தாமுவை தான் வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை கண்ட மனைவியும், மாமியாரும் கத்தி கூச்சலிட்டனர்.

இவர்களது சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் ஓடி வருவதை கண்ட கொள்ளையர்கள் அந்த இடத்தை விட்டு தப்பியோடியுள்ளனர். பிறகு இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த அவர்கள் இறந்துபோன தாமுவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர். புது மனைவி முன்னிலையில் கணவனை கத்தியால் குத்து கொலை செய்துள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தர்மபுரி: இரும்பு பீரோவால் வந்த வினை.. மின்சாரம் தாக்கி 3 பேர் பலி.. வீடுகாலி செய்யும்போது நேர்ந்த சோகம்!