India

கர்நாடகா : மின்கம்பியில் விழுந்த கைக்குட்டையை எடுக்க சென்ற நபர்.. மின்சாரம் தாக்கி நேர்ந்த சோகம் !

கைக்குட்டையை எடுக்க சென்ற நபர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ள நிகழ்வு கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் நகர் பகுதியை அடுத்து உதயகிரி என்ற பகுதியில் வசித்து வருபவர் மல்லப்பா. தனது குடும்பத்துடன் மாடி வீட்டில் வசித்து வரும் இவர், அந்த பகுதியிலுள்ள ஹிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது கைக்குட்டை தவறுதலாக வீட்டின் முன்புறம் விழுந்துள்ளது. அப்படி விழுந்த அந்த கைக்குட்டை முழுமையாக கீழே விழாமல் அங்கிருந்த மின் கம்பியில் சிக்கியிருந்துள்ளது. இதனை கண்ட மல்லப்பா கைக்குட்டையை எடுக்க முயன்றுள்ளார்.

ஆனால் அவருக்கு அந்த கம்பி எட்டவில்லை. இதனால் கம்பு போன்று நீளமான ஒரு பொருளை வைத்து அதனை எடுக்க எண்ணியுள்ளார். அதன்படி வீட்டில் இருந்த ஒட்டடை குச்சி வடிவிலான துடைப்பத்தை எடுத்து வந்து அதனை எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது அந்த குச்சி மின்கம்பியில் பலமாக உரசியுள்ளது. இதனால் அவர் மீது பெரிதாக மின்சாரம் தாக்கி தீப்பிடித்து பலத்த சத்தத்துடன் அவர் கீழே விழுந்தார். சத்தத்தை கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர், அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இது குறித்து அப்பகுதி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகள், மல்லப்பாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைக்குட்டையை எடுக்க சென்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்.. 5 லிட்டர் ஆசிட்டை வீசிய இளம்பெண்.. அரியானாவில் அதிர்ச்சி !