India

தலைக்கேறிய ஆத்திரம்.. பெற்ற தாய் என்றும் பாராமல் கட்டையால் அடித்து கொன்ற மகன்.. உ.பி-யில் பயங்கரம் !

மது வாங்க பணம் தராத காரணத்தினால் பெற்ற தாயை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த மகனின் செயல் உத்திர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்திர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியை சேர்ந்தவர் சமுந்திரா தேவி. இவர் தனது மகன்கள் ஜெயராம், தேவேந்திர ஷைனி ஆகியோருடன் வசித்து வருகிறார். இதில் 25 வயதுமிக்க இளைஞரான தேவேந்திர ஷைனி, வேலைக்கு செல்லாமல் குடித்து நண்பர்களுடன் ஊர் சுற்றி திரிந்துள்ளார்.

மகனின் செயலை தாய் பலமுறை கண்டித்தும், அதனை பொருட்படுத்தாமல் சுதந்திரமாக இருந்துவந்துள்ளார். மதுபோதைக்கு அடிமையான இவர், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் தாய்க்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு உருவானது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மது வாங்குவதற்காக தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார் மகன். ஆனால் தாயோ பணம் தர முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரப்பட்ட மகன், அருகிலிருந்த மரக்கட்டையை எடுத்து தனது தாயாரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த தாய் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் விழுந்தார். இதனைக்கண்டதும் பதறிப்போன மகன், சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

இதையடுத்து தேவேந்திர ஷைனியின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், தேவேந்திர ஷைனி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடியவரை கைது செய்தனர். மது வாங்க பணம் தராத ஆத்திரத்தில் மகனே தாயை கட்டையால் அடித்து கொன்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தன்னை கடித்த பாம்பை திரும்பக் கடித்து இருதுண்டாக்கிய சிறுவன்.. பழங்குடி நம்பிக்கையால் நடந்த விசித்திரம் !