India

4 ஆண்டுகளாக துன்புறுத்தல்.. மாமியாரை கொடூரமாக தாக்கி பார்வையை பறித்த மருமகள்.. கேரளாவில் அதிர்ச்சி !

வயதான மாமியாரை பல ஆண்டுகளாக கொடூரமாக சித்திரவதை செய்து வந்த மருமகளால் மாமியாரின் கண் பார்வை பறிபோன சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை அடுத்துள்ள புந்தலதழம் என்ற இடத்தை சேர்ந்தவர் நளினி. 67 வயதுடைய மூதாட்டியான இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துள்ளார். இதனால் இவர் தனது மகன் - மருமகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது வயதான மாமியார் தங்களுடன் இருப்பது பிடிக்காத மருமகள் அவரை அடிக்கடி சித்திரவதை செய்து வந்துள்ளார். மேலும் உடல்நலம் சரியில்லாத அவரை பிடிக்காத மருமகள் அவரை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார்.

அதோடு அவருக்கு நேரத்திற்கு சரியான சாப்பாடு, தண்ணீர் என்று எதுவும் கொடுக்காமல் கொடுமை படுத்தியும் வந்துள்ளார். இந்த கொடுமைகளையெல்லாம் சகித்து கொண்டு மாமியாரும் வேறு வழியின்றி தனது மகன் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இருப்பினும் வயதானவர் என்றும் பாராமல், அவரை அடித்தும் துன்புறுத்தியுள்ளார் மருமகள். இதனால் அவரது உடலில் பல்வேறு இடங்களிலும் இரத்த கீறல்கள், காயங்கள் இருந்துள்ளது. மருமகள் கொடுமை படுத்தி வந்ததை மகனும் தடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது சுமார் 4 ஆண்டுகளாக தொடர் கதையாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், தனது மூதாட்டி நளினி கொடுமைப் படுத்த படுகிறார் என்பதை அறிந்த மூதாட்டியின் சகோதரர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் அவருக்கு ஒரு கண் பார்வை பறிபோனதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ந்துபோன மூதாட்டியின் சகோதரர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தனது மருமகளை குறித்து வாக்குமூலம் அளித்தார்.

இதனிடையே மாமியாரை தாக்கிய வழக்கில் தான் கைது செய்யப்படுவதை எண்ணிய மருமகள், தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து மருமகள் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை தேடி வருகின்றனர்.

வயதான மாமியாரை பல ஆண்டுகளாக கொடூரமாக சித்திரவதை செய்து வந்த மருமகளின் செயல் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்.. இளம்பெண்ணுக்கு இளைஞர் செய்த கொடூரம்.. கேரளாவில் அதிர்ச்சி !