India

தீயாய் பரவும் மூடநம்பிக்கை.. பேய் பிடித்திருப்பதாக கூறி பெற்ற மகள் கொலை.. நோயால் இறந்ததாக நாடகமாடிய தந்தை

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் பகுதியில் பவேஷ் அக்பரி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். விவசாயியான இவர் அங்கு தனது தம்பி திலீப் அக்பரி மற்றும் மகளுடன் தரியா (வயது 12) ஆகியோருடன் வாழ்ந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மகள் குடும்பத்தாருடன் சரிவர பேசவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக எண்ணிய தந்தை மற்றும் மாமா, அவரை பேய் ஓட்டுவதற்காக முனைப்பு காட்டிவந்துள்ளார். அதன்படி நடந்து முடிந்த நவராத்திரியின் போது தனது மகளை கொடுமை படுத்தி வந்துள்ளனர். மேலும் அவருக்கு சாப்பாடு, தண்ணீர் எதுவும் கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர். மேலும் அடித்தும் துன்புறுத்தி வந்துள்ளனர்.

சிறுமியின் தந்தை மற்றும் மாமா

இதையடுத்து கடந்த அக்டோபர் 7-ம் தேதி சிறுமி மரணடைந்தார். சிறுமியின் உடலை தந்தை மற்றும் மாமா சேர்ந்து வீட்டின் அருகே குழி தோண்டி புதைத்துள்ளனர். சிறுமி இறந்த தகவலை அறிந்து வந்த சிறுமியின் தாய் வழி தாத்தா, சிறுமியின் உடலை கூட பார்க்க முடியவில்லை. சிறுமி இறந்ததை குறித்து தாத்தா, பவேஷிடம் கேட்ட போது, "சிறுமிக்கு தொற்று நோய் தாக்கியுள்ளது. அதனால் அவர் இறந்துவிட்டார். எனவே உடனே புதைத்து விட்டோம்" என்று கூறியுள்ளார்.

இதனை கேட்ட தாத்தாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமியின் தந்தை மற்றும் மாமாவின் பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்துள்ளது. இதனால் அவர்களிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் தங்கள் பிள்ளைக்கு பேய் பிடித்திருப்பதாக எண்ணி, சித்திரவதை செய்து கொன்றதையும், பிணத்தை வீட்டிலேயே குழி தோண்டி புதைத்ததும் தெரிய வந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

முன்னதாக கேரளாவில் பண ஆசைக்காக 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவை உலுக்கிய நிலையில், தற்போது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “4 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகை இல்லை” : பாஜக ஆளும் மாநிலத்தில் புதிய சட்டத்தால் அதிர்ச்சி !