India

தேர்வின்போது ஆடைகளை கழற்ற சொன்ன ஆசிரியர்.. தீக்குளித்து உயிரை மாய்த்த பள்ளி மாணவி : ஜார்கண்டில் பயங்கரம்!

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் என்ற பகுதியில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இங்கு பயிலும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர், தேர்வு எழுதிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த ஆசிரியர் ஒருவர் மாணவி பேப்பர் சீட்டுகளில் இருந்து காப்பி அடிப்பதாக எண்ணி கண்டித்துள்ளார்.

மேலும் அவரது இடத்தில் பிட் பேப்பரை தேடியுள்ளார். ஆனால் அது எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மாணவியின் ஆடைக்குள் பிட் பேப்பரை மறைத்து வைத்திருப்பதாக கூறி ஆடைகளை கழற்றுமாறு வற்புறுத்தியுள்ளார். இந்த அவமானம் தாங்க முடியாமல் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிறகு 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து காவல்துறைக்கு தகவலை அளிக்கப்பட்டதன்பேரில், அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவியிடம் விசாரித்தபோது, "ஆசிரியர் என்னை தேர்வில் காப்பியடிப்பதாக குற்றம் சாட்டி சோதனை செய்தார். அப்போது தேர்வுத் தாள்களை உதறி தேடியுள்ளார். எதுவும் கிடைக்காததால் உடையில் வைத்திருக்கிறாய் என்று கேட்டு அவமானப்படுத்தினார்.

நான் என்னிடம் எதுவும் இல்லை என்று கூறிய பிறகும், ஆடைகளை கழற்ற வற்புறுத்தினார். மேலும் வகுப்பறையை ஒட்டிய அறையில் துணிகளை அகற்றச் செய்தார்" என்று வாக்குமூலம் கொடுத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆசிரியரின் மீது சிறுமியின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Also Read: ம.பி : “அப்பா கிட்ட நா கூட்டிட்டு போறேன்..” சிறுமியை கிடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தந்தையின் நண்பர் !