India

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15 சிறுமி தீ வைத்து எரிப்பு.. பா.ஜ.க ஆளும் உ.பி-யில் கொடூரம்!

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இது குறித்து சிறுமியிடம் கேட்டபோது, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்துள்ளார். இது பற்றி அந்த இளைஞரின் தாய் மற்றும் சகோதரிக்கு தெரியவந்துள்ளது.

பின்னர் அவர்கள் சிறுமியிடம் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர். இவர்களை நம்பிய சிறுமியும் சென்றுள்ளார். இதையடுத்து சிறுமியை தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.

பிறகு சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சிறுமியை தீ வைத்துக் கொளுத்திய தாய் மற்றும் சகோதரியை போலிஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இளைஞரை போலிஸார் தேடி வருகின்றனர்.

Also Read: ஆர்டர் செய்ததோ ரூ.1300 மதிப்புள்ள வாட்ச்.. வந்ததோ மாட்டுச் சாணம்: Flipkart-ல் தொடரும் குளறுபடி!