India

அதிவேகத்தில் ஆட்டோவை அடித்து தூக்கிய சொகுசு கார் : சுற்றுலா வந்த இடத்தில் நடந்த விபரீதம் - ஒருவர் பலி!

புதுச்சேரி இளங்கோ நகரை சேர்ந்தவர் கோபிநாத் (64). இவரது மனைவி பிரசனகுமாரி (62). இவர்கள் தங்கள் மகன்கள் விஜய் லால், ஜெயலால் ஆகியோருடன் வசித்து வரும் நிலையில், பிரசன்னகுமாரிக்கு இன்று அதிகாலை உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் மகன் விஜய் லால் உடன் ஆட்டோவில் அதிகாலை 4:20 மணியளவில் நேரு வீதி வழியாக அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மிஷின் வீதியில் இருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று பிரசன்னகுமாரி வந்த ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. இதனால் ஆட்டோவிலிருந்து தூக்கி வீசப்பட்ட பிரசன்னகுமாரி சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும் ஆட்டோவில் வந்த விஜய் லால் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் மணிமாறன் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் உதவி ஆய்வாளர் சண்முகசத்தியா, உயிரழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில், சென்னை பெருங்களத்தூர் தனியார் கல்லூரியில் படிக்கும் கேரளாவை சேர்ந்த 8 மாணவர்கள் புதுச்சேரிக்கு காரில் சுற்றுலா வந்து விட்டு. பின்னர் சென்னை திரும்பும போது இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து காரை ஓட்டி வந்த கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவர் மஹாதீர்ரை (19), கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த மூதாட்டி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Also Read: “தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த ஆட்டோ.. காப்பாற்ற சென்ற லாரி டிரைவர் 2 பேர் பரிதாப பலி” : ஆம்பூரில் சோகம்!