India

காதலுக்கு இடையூறு.. மனைவி, இரண்டு மகள்களை உயிருடன் எரித்த வாலிபர்.. மகாராஷ்டிராவில் கொடூரம் !

மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியை அடுத்துள்ள டோம்பிவிலி என்ற பகுதியை சேர்ந்தவர் பிரசாத் சாந்தாராம் பாட்டீல் (வயது 40). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ப்ரீத்தி (வயது 35) என்ற மனைவியும், சமீரா (வயது 14), சமிக்ஷா (வயது 11) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் பிரசாத்துக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையறிந்த அவரது மனைவி தினமும் இவரிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் அவரது மகள்களும் தந்தையிடம் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த பிரசாத், தனது காதலுக்கு தடையாக இருந்த மனைவி மற்றும் மகள்களை கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று, அவர்கள் உறங்கி கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் மீது பெட்ரோலை ஊற்றி பற்றவைத்துள்ளார். இதில் அவர்களது உடலில் தீப்பற்றி எரிந்தது. மேலும் இந்த தீ, பிரசாத் மீதும் பட்டுள்ளது. இதனால் அவரும் காயமடைந்துள்ளார்.

இதில் வலி தாங்காமல் அலறித்துடித்த குடும்பத்தின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த மீட்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் 90% தீக்காயங்களுடன் பெண் மற்றும் சிறுமிகளை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் காயமடைந்த பிரசாத்தையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்தனர். அப்போது பிரசாத் தான் குற்றவாளி என்று தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது கொலை வழக்குபதியப்பட்டுள்ளது.

இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமிகள் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்போது உயிருக்கு போராடி வந்த பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கோவிலுக்கு வந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி.. வீடியோ எடுத்து மிரட்டியதால் அதிர்ச்சி !