India

பேருந்தின் முன் தள்ளிக்கொல்லப்பட்ட பீகார் இளைஞர்.. உறவினர்களின் வெறிச்செயலின் பின்னணி என்ன ?

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் வசித்து வந்தவர் ரௌஷன் குமார் என்ற இளைஞர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவர, பெண் வீட்டார் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்த உறவினர் என்றாலும், அவர்கள் காதல் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. எனவே அவர்கள் இருவரும் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்துகொள்ள எண்ணினர். அதன்பேரில் சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். இதையறிந்த பெண்ணின் பெற்றோர்கள் அவர்களை வலைவீசி தேடினர்.

பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் இருவரையும் ஹாஜிபூர் என்ற இடத்தின் அருகே கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களிடம் நேக்காக பேசி, திருமணம் செய்துவைப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அனைவரும் காரில் சென்ற போது, போகும் வழியில் ரெளஷன் குமாரை மட்டும் இறங்க கூறி, வந்தவர்களில் இரண்டு பேர் அவரை ஒரு இடத்திற்கு கூட்டிசென்றனர்.

இளைஞரும் அவரை நம்பி போனபோது, சாலையை கடக்க உதவிபுரிவது போல் ரெளஷனின் கையை பிடித்த அவர்கள், அங்கு வேகமாக வந்துகொண்டிருந்த பேருந்தில் தள்ளிவிட்டுள்ளனர். இதில் தூக்கிவீசப்பட்ட ரௌஷன் குமார், சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், அங்கு வந்த அவர்கள், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து இதுவரை 3 பேரைக் கைதுசெய்துள்ளனர். மகளை காதல் திருமணம் செய்துகொண்ட உறவினர் இளைஞரை பெண் வீட்டார் பேருந்தில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கோவிலுக்கு வந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி.. வீடியோ எடுத்து மிரட்டியதால் அதிர்ச்சி !