India

7 பக்க கடிதம் எழுதி பயிற்சி விமானப்படை வீரர் தற்கொலை.. 6 அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு!

டெல்லியைச் சேர்ந்தவர் அங்கித் குமார் ஜா. இளைஞரான இவர் பெங்களூருவில் உள்ள விமானப் படை பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 21ம் தேதி கல்லூரி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் போலிஸார் விசாரணையில், அங்கித் குமார் ஜா பயிற்சியின் போது விதிமுறைகளை மீறியதாகக் கூறி அவரை அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல் தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய 7 பக்க கடிதத்தையும் போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதில், உயர் அதிகாரிகள் 6 பேர் தன்னை சித்தரவதை செய்து வந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளது. இந்த கடிதத்தை கொண்டு போலிஸார் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், "தனது மகன் நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அவனது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும், விமான பயிற்சி கல்லூரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அங்கிருந்தவர்கள் எந்த பதிலும் முறையாகத் தெரிவிக்கவில்லை" என்று அங்கித் குமார் ஜாவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

Also Read: மாநிலம் விட்டு மாநிலம் வந்து திருட்டு.. 20 ஆயிரம் மதிப்புடைய பொருளை 1000-க்கு விற்றதால் சிக்கிய திருடன் !