India

8 மாத குழந்தை தொண்டையில் சிக்கிய நக வெட்டி.. அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு நடந்தது என்ன ?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்தவர் கரண் - விஷாலி தம்பதியினர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சமீபத்தில் திருமணமான இவர்களுக்கு தற்போது 8 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி மாலை அந்த குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் குழந்தை எதிர்பாராதவிதமாக ஒரு 5 செ.மீ., அளவிலான நக வெட்டியை (Nail - Cutter) விழுங்கியுள்ளது. இதனை கண்டதும் பதறியடித்து பெற்றோர்கள் குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கே குழந்தைக்கு X-Ray எடுத்து பார்த்தபோது, அந்த நகவெட்டி சுமார் 15 செ.மீ., ஆழத்தில் சிக்கியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைக்குக் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மேற்கொண்டனர். சுமார் 30 நிமிடம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் தொண்டையில் சிக்கியிருந்த நகவெட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "சுமார் 15 செ.மீ., ஆழத்தில் சிக்கியிருந்த நகவெட்டியை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளோம். தற்போது குழந்தை நலமாக உள்ளது. குழந்தைகளிடம் இருந்து இதுபோன்ற ஆயுதங்களை தள்ளி வைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினாலும் சில பெற்றோர்கள் அதை கருத்தில் கொள்ளாமல் இருப்பதால இது போன்ற விளைவுகள் ஏற்படுகிறது.

எனவே இனியாவது குழந்தைகள் எளிதில் விழுங்கக்கூடிய பொருட்களை அதன் அருகில் வைக்க வேண்டாம்" என்று அறிவுரை கூறியுள்ளார். இந்த சம்பவம் மஹாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மோரில் கலக்கப்பட்ட தூக்கமாத்திரை.. மூன்று மாதங்களுக்கு பிறகு சிக்கிய மனைவி.. பின்னணி என்ன ?