India

அசாம் : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மாமா.. யாரிடமும் சொல்லக்கூடாது என சிப்ஸ் வாங்கி கொடுத்த அவலம் !

அசாம் மாநிலம் துப்ரி பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிறுமியின் தாயாரின் உறவினர்கள் அவ்வப்போது வீட்டிற்கு வருவது பழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமியின் தாயாருக்கு சகோதரர் முறையான உறவினர் ஒருவர் (வயது 31), சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து செல்ல கேட்டுள்ளார். தாயும் அதற்கு சம்மதித்துள்ளார்.

அதன்பிறகு சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்ற சிறுமியின் மாமா, அவரை தனது அறைக்கு கூட்டி சென்றுள்ளார். அங்கே அவருக்கு விளையாட்டு பொருட்கள், சாக்லேட் என வாங்கி கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என அவருக்கு ரூ.100 கொடுத்தும், சிப்ஸ் பாக்கெட் வாங்கி கொடுத்தும் அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து வீட்டிற்கு சிப்ஸ் பாக்கெட்டுடன் வந்த சிறுமி தாயிடம் வயிறு வலிக்கிறது என்று அழுதுகொண்டே கூறியுள்ளார். இதையடுத்து விசாரிக்கையில் சிறுமி தனக்கு நடந்ததை தாயிடம் கூறியுள்ளார்.

இதைக்கேட்டதும் அதிர்ந்து போன தாய், அவரது சில உறவினர்களை கூட்டி சென்று அந்த நபர் வீட்டிற்கு சென்று சண்டையிட்டுள்ளார். மேலும் புகார் அளிக்கப்போவதாகவும் கூறியுள்ளார். இதனால் கோபம்கொண்ட அந்த நபர், புகார் அளித்தால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தாய் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது குற்றம் உறுதியானது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மாமாவே சிறு மருமகளை பாலியல் வன்கொடுமை செய்து, கையில் 100 ரூபாயும், சிப்ஸ் பாக்கெட்டும் வாங்கிக்கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தர்மபுரி :இரும்பு பீரோவால் வந்த வினை.. மின்சாரம் தாக்கி 3 பேர் பலி.. வீடுகாலி செய்யும்போது நேர்ந்த சோகம்!