India

கர்நாடகா : பெற்ற பிஞ்சு குழந்தையை ரூ.50,000-க்கு விற்ற தந்தை.. காரணத்தை கேட்டு அதிர்ந்த அதிகாரிகள்..

கர்நாடகா மாநிலம் சாமராஜநகர் பகுதியை சேர்ந்தவர் பசப்பா (வயது 35). அந்த பகுதியில் ஹோட்டல் தொழிலாளியாக இருக்கும் இவருக்கு, திருமணமாகி 7 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மனைவி மீண்டும் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்த நிலையில், இருதய நோயால் அவதிப்படும் இவரது மனைவிக்கு அறுவை சிகிச்சை, மருந்து செலவு என அதிகமாக கடன் வாங்கி வைத்துள்ளார் பசப்பா. எனவே அந்த கடனை எப்படியாவது அடைக்கவேண்டும் என்று எண்ணிய அவர், அதற்காக தனக்கு பிறந்த இரண்டாவது குழந்தையை வேறொருவரிடம் விற்க நினைத்துள்ளார்.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி நாகவேணியிடம் இது குறித்து கூறியுள்ளார். அப்போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது குழந்தையை கொடுக்கமாட்டேன் என்றும் அடம்பிடித்துள்ளார்.

இதனால் ஆவேசப்பட்ட பசப்பா தனது மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் அவரை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி கொடுமை செய்துவந்துள்ளார். இதனால் தனது மூத்த மகனை எண்ணிய நாகவேணி மனமே இல்லாமல் குழந்தையை விற்க சம்மதித்துள்ளார் மனைவி நாகவேணி. பின்னர் அவர்கள் கலிபுரா என்ற பகுதியில் இருக்கும் ஒரு தம்பதியினருக்கு அந்த குழந்தையை விற்றுள்ளனர்.

மேலும் அவர் விற்பதற்கு முன்பு வெற்று பாத்திரத்தில் கையெழுத்தும் போட்டுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த அதே பகுதியை சேர்ந்த திருநங்கை ஒருவர் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் பசப்பா- நாகவேணி தம்பதியினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இவையனைத்தும் உண்மை என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் குழந்தையை பெற்று சென்றவர்களை தேடி வருகின்றனர். மனைவியின் மருத்துவ செலவுக்காக பிறந்து 25 நாட்களே ஆன குழந்தையை ரூ.50,000-க்கு தந்தை விற்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஆன்லைன் செயலி மூலம் ஆபாச பேச்சு.. தனிமையில் வரவழைத்து பணம் பறிப்பு - மோசடி கும்பல் சிக்கியது எப்படி?