India

கேரளா : திருமண உறவை முறித்து தனியே வாழ்ந்து வந்த மனைவி.. 5 ஆண்டுகள் கழித்து கணவர் செய்த கொடூரம் !

கேரள மாநிலம் ஏழாம் குளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வித்தியா என்ற இளம்பெண்ணுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஒரு வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள், மன வேறுபாடு காரணமாக மனைவி கணவனை விட்டு பிரிந்துள்ளார். சுமார் 5 வருடங்கள் கணவரை பிரிந்து தனது தாயார் வீட்டில் வாழ்ந்து வந்திருக்கிறார் வித்தியா.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கணவர் சந்தோஷ், தனது மனைவியை காண அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியுள்ளது. இதில் ஆத்திரப்பட்ட சந்தோஷ் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கீழே விழுந்த வித்தியாவை, தான் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை கொண்டு வித்தியாவின் இரண்டு கைகளையும் துண்டாக வெட்டியுள்ளார்.

மேலும் வித்தியாவின் தலைமுடியையும் வெட்டியுள்ளார். இதில் அலறி துடித்த வித்தியாவின் சத்தத்தை அவரது தந்தை தனது மகளை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் சந்தோஷ் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து இவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமணையில் அனுமதித்தனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தோஷ் தான் குற்றவாளி என்று உறுதியானது. இதையடுத்து அவர்மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்த நிலையில், அவரது மொபைல் நம்பரை வைத்து அவரது இருப்பிடத்தை அறிந்து சுற்றிவளைத்து அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தன்னுடன் வாழமாட்டேன் என்று கூறி 5 ஆண்டுகள் தனியே வாழ்ந்து வந்த மனைவியை, கணவர் வீடுபுகுந்து கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "படித்த இளைஞர்களுக்கு உலகத்தர திறன்களை வழங்குவோம்.." - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் !