India

தெலங்கானா : பெற்றோர் பேச்சை கேட்டு பேசுவதை நிறுத்திய காதலி.. ஆத்திரத்தில் கொன்று புதைத்த காதலன்..

தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி என்ற பகுதியை சேர்ந்தவர் சாய் பிரியா 19 வயது இளம்பெண். கல்லூரி மாணவியான இவரும், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீ சைலம்(23) என்ற இளைஞரும் சுமார் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு இவர்கள் காதல் விவகாரம் பெண் வீட்டருக்கு தெரிய வரவே அவர்கள் தங்கள் மகளை கண்டித்துள்ளனர். பெற்றோர்கள் பேச்சை மீற முடியாத மகள், தனது காதலனுடன் பேசுவதை தவிர்ந்து வந்துள்ளார். மேலும் அவரையும் சந்திக்காமல் தவிர்த்து வந்ததாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த காதலன், பெண்ணுடன் கடைசியாக ஒரு முறை பேச வேண்டும் என்று கூறி தனியே அழைத்துள்ளார். அதனால் அவரும் இவரை நம்பி ஒரு காட்டு பகுதிக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே பேச்சு வார்த்தை ஏற்பட்டுள்ளது. இது வாக்குவாதமாக மாறி, அந்த பெண்ணை தாக்கியுள்ளார். மேலும் அவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

இதையடுத்து தனது உறவினர் நண்பர் சிவா என்பவரை அழைத்து அவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து அங்கே ஒரு பகுதியில் குழிதோண்டி புதைத்துள்ளனர். அதோடு அந்த பெண்ணின் மொபைல் போனையும் அங்கிருந்த கால்வாயில் தூக்கி எறிந்து தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதனிடையே வெளியே சென்று வருவதாக கூறிய மகள் நேரமாகியும் காணவில்லை என்பதால் பெற்றோர்கள் ஆங்காங்கே தேடினர். அப்படியும் அவர் கிடைக்கவில்லை என்பதால் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இளம்பெண்ணை தேடினர்.

அதனடிப்படையில் ஸ்ரீ சைலத்தை கைது செய்து விசாரித்தனர். அப்போது தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதோடு தனக்கு உதவியாக சிவாவும் இருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: E-Bike ஷோரூமில் திடீரென பற்றிய தீ.. 8 பேர் பரிதாப பலி.. இரவில் நடந்த சம்பவத்தால் தெலுங்கானாவில் சோகம் !