India

"பெங்களூரு வெள்ளத்துக்கு காரணமே ஐடி நிறுவனங்கள்தான்".. எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றிய பா.ஜ.க தலைவர் !

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் சில தினங்களாக அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பெங்களூர் மாநகரமே வெள்ளக்காடாகக் காட்சியளிப்பதுடன் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதிலும் நகரில் உள்ள சென்ட்ரல் சில்க் போர்டு சந்திப்பு முதல் கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு வரை சுமார் 17 கி.மீ புறநகர் வட்டச்சாலை சாலையில் 500க்கும் மேற்பட்ட ஐ.டி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதி முழுவதும் தற்போது மழை நீரால் மூழ்கியுள்ளது. இப்பகுதியில் மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாததே இந்த நிலைக்குக் காரணம் என கூறப்படுகிறது.

இந்த மழை வெள்ளம் காரணமாக ஐ.டி நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.225 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவில்லை என்றால் தங்களது நிறுவனத்தை வேறு இடத்துக்கு மாற்றுவோம் ஐ.டி நிறுவனங்கள் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்குக் கடிதம் எழுதியுள்ளன.

அதன்பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில், "தங்கள் நிறுவனத்தை வேறு இடத்திற்கு மாற்றவேண்டாம். அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்" என கர்நாடக அரசு சார்பில் ஐடி நிறுவனங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பாஜக மூத்த தலைவர் ரமேஷ் கூறியுள்ள கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசியுள்ள அவர், " கர்நாடகாவை விட்டு வெளியேறி தெலுங்கானா மாநிலத்துக்கு போகிறோம் என ஐடி நிறுவனங்கள் கர்நாடகா மாநில அரசை மிரட்டிக் கொண்டிருக்கின்றன. நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள தெலுங்கானாவில் ஐடி நிறுவனங்களாள் தாக்குப் பிடிக்க முடியாது.

ஒருபக்கம் பெங்களூர் நகரை காப்பாற்றுங்கள் என பிரசாரம் செய்வீர்கள். பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதுவீர்கள். இன்னொரு பக்கம் தெலுங்கானாவுக்கு போவோம் என மிரட்டலும் விடுகிறீர்கள். பெங்களூர் ஐடி நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை கர்நாடகா அரசுகள் வாரி வழங்கி உள்ளன.

பெங்களூர் நகர பெருவெள்ளத்துக்கு காரணமே இந்த ஐடி நிறுவனங்கள்தான். 100க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. எலக்ட்ரானிக் சிட்டியில் இருக்கும் பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ஆக்கிரமிப்பை செய்துள்ளன. முதலில் ஐடி நிறுவனங்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை கைவிட வேண்டும். அப்படி செய்தால்தான் பிரச்சனைக்கு தீர்வு காணவும் முடியும்." என்று கூறியுள்ளார்.

Also Read: 120 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்.. 3 பேர் பலி: ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்