India

ஆற்றில் மிதந்து வந்த உடல் உறுப்புகள்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை.. தந்தை,மகன் கைது !

ஆகஸ்ட் 23-ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள முத்தா ஆற்றில் மனித உடல் உறுப்புகள் மிதந்து வந்தன. இது குறித்து அங்கிருந்தவர்கள் போலிஸாருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த போலிஸார் உடலுறுப்புகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பின்னர் காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து ஆய்வு செய்ததில் உஷா (62) என்ற மூதாட்டியின் உடல் உறுப்புக்கள் என்று தெரியவந்தது. மேலும் அவரை காணவில்லை என்று அவரது மகன் சந்திப் , பேரன் சாஹில் ஆகியோர் புனே முத்வா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் அந்த மூதாட்டியின் மகள் சீத்தல் காம்ப்ளே தன் தாயார் காணாமல் போனதில் சந்திப், அவரது மகன் சாஹிலுக்கு தொடர்பிருக்கும் என்று சந்தேகிப்பதாக போலீஸில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து சந்திப் , சாஹில் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தியபோது, மூதாட்டியை அவர்கள் கொலை செய்துள்ளது தெரியவந்தது.

அவர்கள் வாக்குமூலத்தின் அடிப்படையில், மூதாட்டி உஷாவின் நகைகளை அவரது மகன் மற்றும் பேரன் ஆகியோர் கேட்டதும் அதற்கு மறுத்த மூதாட்டி அவர்களை வீட்டை விட்டு வெளியே போகச்சொன்னதும் தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்தது.இதன் பின்னர் தடயத்தை மறைக்க எலக்ட்ரிக் கட்டர் மெஷினை வாங்கிவந்து மூதாட்டியின் உடலை பல துண்டுகளாக வெட்டி சாக்குமூட்டையில் வைத்து ஆற்றில் தூக்கிப்போட்டதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து மகன் சந்திப் , சாஹில் ஆகியோரை போலிஸார் கைது செய்தனர்.

Also Read: ரிப்பன் வெட்டி திறந்துவைக்கப்பட்ட பாலம்.. ஒரே நொடியில் இடிந்து விழுந்த சோகம்.. படுகாயமடைந்த அதிகாரிகள் !