India

தாயை விட்டு வேறொரு பெண்ணுடன் உறவு.. Grinder கல்லால் தந்தையை கொன்ற 16 வயது மகள்.. உ.பி-யில் அதிர்ச்சி !

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை அடுத்து ரஹீஸ்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதுமிக்க நகைக்கடைக்காரர். இவர் அந்த பகுதியில் 38 வயதுடைய மனைவி, 16 வயது மகள் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நகைக்கடைக்காரருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. பல மாதங்களாக இருந்து வந்த இரகசிய உறவு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கும்போது அவரது மனைவிக்கு தெரியவந்தது. இதையடுத்து கணவனின் மொபைல் போனை எடுத்து, தனது கணவரிடம் இனி பேசக்கூடாது என அந்த பெண்ணுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் மனைவி.

இருப்பினும், அதனை கேட்காததால் நமது உறவை முறித்துக்கொள்ளலாம் என மனைவி சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியை பெல்ட்டால் அடித்துள்ளார்.

தனது தாய் அடிவாங்குவதை கண்ட 16 வயது மகள், உடனே சமயலறையில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து தனது தந்தையின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து என்ன செய்வதென்று திகைத்த தாயும், மகளும், சடலத்தை தூரமாக காரில் கொண்டு போய் விடலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் வீட்டில் யாருக்கும் கார் ஓட்ட தெரியாததால், மகள் youtube பார்த்து கார் ஓட்டகற்றுக்கொண்டுள்ளார். பிறகு அவர்கள் திட்டப்படி வீட்டில் இருந்து சுமார் 1.5 கி.மீ., தள்ளி ஒரு இடத்தில் விபத்து நடந்து இறந்தது போன்று, காருடன் சடலத்தை விட்டு விட்டு வந்துள்ளனர்.

பிறகு அந்த இடத்தில் சடலம் இருப்பதை கண்ட பொதுமக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் வந்து உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததையடுத்து, விசாரணையை தொடங்கினர். பிறகு இறந்தவர் வீட்டிற்கு சென்று மனைவி, குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பதில்கள் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததால், துருவி துருவி விசாரித்தனர்.

முதலில் தங்களுக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று மறுப்பு தெரிவித்து வந்த தாயம், மகளும், பிறகு நடந்தவற்றை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடமிருந்து கொலை செய்த ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரகள் மீது வழக்குப்பதிவு செய்து மகளை சிறார் சிறைக்கும், தாயை சிறைக்கும் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கர்நாடகா : காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி.. வலிப்பு வந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலம் !