India

சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர்.. கொலை செய்த பெண்ணின் வளர்ப்பு தந்தை, சகோதரர்: உத்தரகாண்ட்டில் கொடூரம்

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா பகுதியை அடுத்துள்ள பனுவாதோகான் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் சந்திரா. பட்டியலினத்தை சேர்ந்த இவரும், அந்த பகுதியில் வசித்து வந்த மாற்று சமூகத்தை சேர்ந்த கீதா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவர, அவர்கள் கீதாவை கடுமையாக கண்டித்துள்ளனர்.

இதனால் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து இருவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக காவல் நிலையத்தில் புகாரும் தெரிவித்தனர். ஆனால் அதனை பெரிதும் பொருட்படுத்தாத காவல்துறை கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

தங்கள் வீட்டுப்பெண் ஒரு பட்டியலினத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததை எண்ணி ஆத்திரத்தில் இருந்த பெண்ணின் மாற்றுதந்தையும் சகோதரனும், அவர்களை கொல்ல எண்ணினர். அதன்படி ஜெகதீஷை கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவர்கள் திட்டத்தின்படி நேற்றைய முன்தினம் (வியாழன்கிழமை) ஜெகதீஷை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்தி சென்று அங்கு அவரை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதையடுத்து சடலத்தை காரில் எடுத்துக்கொண்டு கீதாவின் மாற்றுதந்தையும் சகோதரனும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த காவல்துறையினர், இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்ததோடு அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் ஜெகதீஷ் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் அளித்தனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து உத்தரகாண்ட் பரிவர்தன் கட்சியின் தலைவர் கூறுகையில், "அவர்களுக்கு திருமணமான பிறகு ஆகஸ்ட் 27-ம் தேதியன்று, தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, பாதுகாப்பு கோரி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினர். பாதிக்கப்பட்டவர் சால்ட் சட்டப்பேரவை தொகுதியில் இரண்டு முறை எங்கள் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். தம்பதியின் புகாரின் பேரில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தால், சந்திராவை காப்பாற்றியிருக்கலாம்" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "இந்த ஆணவ கொலை உத்தரகாண்ட் மாநிலத்திற்கே பெரிய அவமானம். பாதிக்கப்பட்ட ஜெகதீஷ் மனைவி கீதாவிற்கு 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.

மாற்று சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால் ஆத்திரப்பட்ட பெண்ணின் வளர்ப்பு தந்தை மற்றும் சகோதரர் அவரது கணவரை கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: துப்பாக்கி சுடாததால் உயிர் தப்பிய அர்ஜெண்டினா துணை அதிபர்.. மக்கள் முன்னிலையில் நடந்த பகீர் சம்பவம்!