India

1 வயதில் பிரிந்த மகன்.. 25 ஆண்டுக்கு பின்னர் சந்தித்த தாய்.. கேரளா to குஜராத் பாசப்பிணைப்பு!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவர் வேலை நிமித்தமாக 30 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் சென்று அங்குள்ள ராம் பாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அதன்பின்னர் குடும்பத்துடன் கேரளா திரும்பிவந்த நிலையில், அவர் மீண்டும் கருவுற்றுள்ளார். அப்போது ஏற்பட்ட மனக்கசப்பில் கீதாவின் கணவர் ராம் பாய் மூத்த மகனை அழைத்துக்கொண்டு குஜராத் சென்றுவிட்டார்.

குஜராத் சென்றவர் அங்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துகொண்டார். தன் கணவர் திரும்பிவராததை அறிந்த கீதா குஜராத் சென்று அவர்களை தேடியும் காணாமல் திரும்பிவந்துள்ளார்.

இந்த நிலையில், தாயைப் பிரிந்து சென்ற மகன், தாயைத் தேடி 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்துள்ளார். தனது உறவினர் ஒருவர் மூலம் தாயை அறிந்துகொண்ட அவர் பல இடங்களில் விசாரித்து கேரளா வந்த அவர் கோட்டயம் கருக்காச்சல் எல்லை காவல் நிலையத்தில் தாய் குறித்து விசாரித்துள்ளார்.

பின்னர் இது குறித்து கீதாவுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், காவல்நிலையத்துக்கு வந்த கீதா தனது மகனை கட்டிப்பிடித்து அழுதுள்ளார். குஜராத்தில் வளர்ந்த மகனுக்கு ஹிந்தி மட்டுமே தெரியும் என்பதால் மலையாளம் மட்டுமே அறிந்த தாயுடன் அவரால் சரியாக பேசமுடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து பேசிய கீதா, "இறப்பதற்கு முன்பு மகனை ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என நாள்தோறும் வேண்டிக்கொள்வேன். என் மகன் ஓணம் பண்டிகைக்காக எனக்கு கிடைத்த பரிசாக நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Also Read: உ.பி : புனித கங்கை நதியில் எப்படி கோழிக்கறி சமைக்கலாம் ? -படகில் சென்றவர்கள் மீது வழக்கு பதிவு !