India

இறந்து போன வளர்ப்பு மகன் சடலத்துடன் வீட்டிலேயே தங்கி இருந்த 82 வயது முதியவர்.. உருக்கும் பாசப்போராட்டம் !

சண்டிகர், மொஹாலி என்ற பகுதியில் வசித்து வருபவர் 82 வயது முதியவர் பல்வந்தர் சிங். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில், சுக்விந்தர் சிங் என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இருவரும் அந்த பகுதியில் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக முதியவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

இதைத்தொடர்ந்து அவரது வீட்டை கடக்கும்போது துர்நாற்றமும் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் முதியவர் வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது அவரது வளர்ப்பு மகன் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவரது உடலை மீட்க முயன்றனர். அப்போது அவர்களை முதியவர் தடுத்ததால், அவரை வலுகட்டாயமாக வெளியே அழைத்துவந்து சடலத்தை மீட்டனர். பின்னர் அதனை உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், "முதியவர் தனது வளர்ப்பு மகன் இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் எங்களை அவர் உடலை மீட்க அனுமதிக்கவில்லை. பின்னர் அவரை வெளியே அனுப்பி நாங்கள் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

அவர் இறந்து சுமார் 4 நாட்களாவது இருக்கும் ஆனால் அவர் எப்படி இறந்தார்; இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து முதியவர் தெரிவித்தால் மட்டுமே அறிய முடியும். ஆனால் அவரோ அதிர்ச்சியில் இருக்கிறார்." என்று தெரிவித்தனர். சடலத்துடன் 4 நாட்கள் இருந்த முதியவரின் செயல் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வீட்டை விட்டு வந்த பாட்டியை மீட்ட காவலர்கள்.. வாசலில் போட்டுவிட்டு செல்லுமாறு கூறிய கொடூர உறவுக்கார பெண்!