India

11 பேரும் நல்லவர்கள்.. பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் பா.ஜ.க MLA !

2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்பவரையும் அவரின் குடும்பத்தினரையும் ஒரு இந்துத்துவ கும்பல் தாக்கியது.

அப்போது 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை அந்தக் கும்பல் கூட்டுப் பலாத்காரம் செய்து, அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்தது. அதுமட்டுமல்லாமல் பில்கிஸ் பானுவின் கையில் இருந்த இரண்டரை வயதுக் குழந்தையைப் பாறையில் மோதி அடித்துக் கொலை செய்து தப்பி ஓடியது. இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.

இதைத் தொடந்து இந்த சம்பவத்தில் 11 பேரைக் போலிஸார் கைது செய்தனர். நீண்ட நாள் நடந்த இந்த வழக்கில் கடந்த 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலிஸார் உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றம் விடுவித்தது.

7 பேர் விடுதலையை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் 7 பேரையும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 11 பெரும் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வழக்கில் தண்டனை குறைப்பு குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியது.

இந்நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 11 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கி குஜராத் பா.ஜ.க அரசு விடுதலை செய்துள்ளது. பா.ஜ.க அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் 11 பேரும் நல்லவர்கள். அதனால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துப் பேசிய குஜராத் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சி.கே.ராவுல் ஜி, " அவர்கள் பிராமணர்கள். பொதுவாகவே நல்ல பழக்க வழக்கம் கொண்டவர்கள். சிறையிலும் அவர்களது நடத்தை நன்றாகவே இருந்துள்ளது. அதனால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை பா.ஜ.க நல்லவர்கள் என சொல்கிறதா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: ”மோடி கை காட்டும் நபருக்குத்தான் பா.ஜ.க-வில் பதவி”.. சுப்பிரமணியன் சுவாமி தாக்கு!