India

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற காதலன்.. கோபத்தில் காதலனுக்கு தாய் கொடுத்த கொடூர தண்டனை !

உத்தர பிரதேசம் மாநிலம் லகிம்பூர் கெரி பகுதியை அடுத்துள்ள கிராமத்தில் 36 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 14 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில், தனது கணவரை பிரிந்து மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

கூலி வேலை செய்து வரும் இவருக்கு 32 வயதுடைய ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் அந்த நபரையும் தன்னுடன் தங்க வைத்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் திட்டம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் வேலைக்கு செல்லும் நேரத்தில் வீட்டில் இருக்கும் மகளை இவரது பொறுப்பில் விட்டுவிட்டு செல்வார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அந்த நேரத்தில் வீட்டிலிருந்த 14 வயது மகளை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஓடி வந்து மகளை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.

ஆனால் அவரையும் தாக்கியத்துடன் சிறுமியை வலுக்கட்டாய படுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், சமயலறையில் இருந்த கத்தியை எடுத்து அந்த நபரை தாக்கியுள்ளார். மேலும் அவரது அந்தரங்க உறுப்பையும் வெட்டியுள்ளார்.

இதில் வலி தாங்க முடியாமல் அந்த நபர் அலறியதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவரை மீட்டு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்ததுடன் விசாரித்தனர்.

அப்போது தனது மகளை பாதுகாக்க வேறு வழி தெரியாததால் அந்த பெண் அப்படி நடந்துகொண்டாதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஒரு தலை காதலால் நேர்ந்த கொடூரம் : பள்ளி மாணவியை சுட்ட மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ - நடந்தது என்ன ?