India

காசு கேட்ட சுங்கச்சாவடி ஊழியர்.. கழுத்தைப் பிடித்து தரதரவென காரோடு சேர்த்து இழுத்துச் சென்ற நபர்!

இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் அவ்வப்போது எழுந்து வருகிறது. மேலும் சுங்கக்கட்டணம் தர மறுத்து வாகன போட்டிகள் பலர் அங்கு வேலைசெய்யும் ஊழியர்களிடம் தகராறு செய்யும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் சுங்கக்கட்டணம் கேட்ட ஊழியரின் கழுத்தைப் பிடித்து கார் ஓட்டுநர் ஒருவர் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் புறவழிச்சாலையில் உள்ள காவநாடு பகுதியில் சுங்கச்சாவடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வழியாக காரில் வந்த ஒருவர், சுங்க கட்டணம் தரமுடியாது என ஊழியரிடம் கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது காரில் இருந்தவர் சுங்க ஊழியரின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு சிறிது தூரம் காரை ஒட்டிச் சென்று அவரை கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளார்

இதில் சுங்கச்சாவடி ஊழியருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை செய்ததில் படுகாயம் அடைந்த ஊழியர் அருண் என தெரியவந்துள்ளது.

மேலும் காரின் எண்ணைக் கொண்டு இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுங்கக்கட்டணம் கேட்ட ஊழியரை காரோடு சேர்த்து இழுத்துச் சென்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இந்திய காதலனை திருமணம் செய்ய எல்லை தாண்டிய பாகிஸ்தான் பெண்.. நேபாளம் சென்றவர் சிக்கியது எப்படி ?