India

தெலங்கானா பா.ஜ.க தலைவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு: போலிஸ் தீவிர விசாரணை!

தெலங்கானா மாநில தலைவர்களின் ஒருவர் ஞானேந்திர பிரசாத். இவருக்குக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.

மேலும் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் வீட்டில் தனியாகவே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஞானேந்திர பிரசாத் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று தனது உதவியாளரிடம் தனது அறைக்கு செல்வதாகக் கூறிவிட்டு ஞானேந்திர பிரசாத் சென்றுள்ளார். பின்னர் அவருக்கு காலை உணவை உதவியாளர் எடுத்துச் சென்று கதவைத் தட்டியுள்ளார். ஆனால் அவர் கதவைத் திறக்கவில்லை.

இதனால் பதற்றமடைந்த உதவியாளர் அறையின் கண்ணாடிக் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுபார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் விபத்து ஏற்பட்டத்தில் இருந்தே ஞானேந்திர பிரசாத் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் பா.ஜ.க தலைவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: 3 வயது குழந்தையை கொன்ற 13 வயது சிறுவன்.. தந்தை அதிரடி கைது ! - பின்னணி என்ன ?