India

"நமது அரசாங்கம் என்று கூறவே அசிங்கமாக உள்ளது".. உ.பி அரசை விமர்சித்த பா.ஜ.க எம்.பி ! பின்னணி என்ன ?

உத்தர பிரதேச மாநிலம், நொய்டா பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த் தியாகி. இவர் பா.ஜ.க-வின் கிசான் மோர்ச்சா சங்கத்தின் உறுப்பினராகவும், யுவ சமிதியின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

இவர் தனது குடியிருப்பில் உள்ள ஒரு இடத்தை ஆக்கிரமித்து அங்கு செடிகளை வைத்துள்ளார். இதைப்பார்த்த அதே குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் இது விதிமீறலாக இருப்பதாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் இருவருக்குமிடையே மோதலாக வெடித்தது.

மேலும் ஸ்ரீகாந்த் தியாகி அந்த பெண்ணை பற்றி ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளார். அதோடு அந்த பெண்ணை இவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த் தியாகி அந்த பெண்ணை மிரட்டும் வீடியோ அண்மையில் இணையத்தில் வைரலானது. இதையடுத்து இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம், ஸ்ரீகாந்த் தியாகியைக் கைதுசெய்யக்கோரி கண்டனம் தெரிவித்தது.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது பா.ஜ.க, பிரமுகரான ஸ்ரீகாந்த் தியாகிக்கு நொய்டாவில் இருக்கும் சொந்தமான சட்டவிரோத கட்டடங்களை உத்தரபிரதேச காவல்துறையினர் புல்டோசர் கொண்டு இடித்துள்ளது.

அதோடு, ஸ்ரீகாந்த் தியாகியின் ஆதரவாளர்களையும் கைதுசெய்த காவல்துறையினர், அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்துள்ளது. இதனிடையே ஸ்ரீகாந்த் தியாகி தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது ஸ்ரீகாந்த் தியாகி கட்டடம் புல்டோசரால் இடித்துத் தள்ளப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பான தகவல் அறிந்து சம்பவம் நடைபெற்ற குடியிருப்புப் பகுதிக்கு வந்த பாஜக எம்.பி. மகேஷ் சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவருக்கு வந்த அலைபேசியை அவர் எடுத்துப்பேசினார். அதில், "நமது அரசாங்கம் நடக்கிறது என்று கூறவே அசிங்கமாக உள்ளது. இதை விட பெரிய அவமானம் எதுவும் இனி நேர்ந்துவிடாது" எனக் கோபத்துடன் பதிலளித்துள்ளார். இந்த வீடியோவை அங்கிருந்த செய்தியாளர்கள் பதிவு செய்த நிலையில் இது இணையத்தில் வைரலானது.