India

பணக்காரர்களுக்கு 10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி.. அரசின் முன்னுரிமை யாருக்கு? பாஜக எம்.பி விமர்சனம் !

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் ஜூலை 18ம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கினர்.

ஆனால் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசைக் கண்டித்து அவைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி மொத்தம் 23 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதைத் எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டத்துக்கு பணிந்து எம்.பிக்கள் மீதான நடவடிக்கை திரும்பபெறப்பட்டது.

பின்னர் இது குறித்த விவாதம் மக்களவையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது பேசிய பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் தூபே, "இலங்கை,பூடான், வங்கதேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் விலைவாசி உயர்ந்து வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது.

அப்படியிருக்கையில் இந்தியாவில் ஏழைகளுக்கு 5 கிலோ ரேஷன் வழங்கபடுகிறது. ஏழைகள் 2 வேளை இலவச உணவு உண்கிறார்கள் என்றால் அதற்கு பிரதமர் மோடிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்" என்று கூறினார். இவரது இந்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த கருத்துக்கு பாஜக எம்.பி, வருண் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை இந்தியில் பதிவிட்டுள்ள அவர், "ஏழைகளுக்கு 5 கிலோ ரேஷன் வழங்கியதற்கு 'நன்றி' கூறவேண்டும் என்று எதிர்பார்க்கும் சபை, கடந்த ஐந்து ஆண்டுகளில் ₹ 10 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது. அரசு நிதி ஒதுக்குவதில் யாருக்கு முதல் உரிமை கொடுக்கிறது? என்று கேட்டுள்ளார்.

அதோடு இந்த பதிவில் ஒன்றிய அரசு கடன் தள்ளுபடி செய்த தொகையையும் அவர் இணைத்துள்ளார். பாஜக அரசை அந்த கட்சியின் எம்.பியே விமர்சித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஆட்சியமைத்து 1 மாதம் ஆகியும் பதவியேற்காத அமைச்சர்கள்.. பா.ஜ.க. அரசியலில் சிக்கித்தவிக்கும் மகாராஷ்டிரா !