India

4-வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 4 வயது குழந்தை.. - கொடூர தாய் செய்த செயலால் அதிர்ச்சி !

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சம்பங்கிராம் என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு கிரண் - சுஷ்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கிரண் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக இருந்து வரும் நிலையில், சுஷ்மா(வயது 34) ஒரு பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு 4 வயதில் துருதி என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. மனவளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள இவரது குழந்தைக்கு சரியாக பேச்சும் வராது. இந்த குழந்தையை சுஷ்மா மட்டும் தனி ஆளாக கவனித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் கிரண் பணிக்கு சென்றுள்ளார். அப்போது சுஷ்மா, தனது 4 வயது குழந்தையை அழைத்துக்கொண்டு 4-வது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார். பின்னர் சுஷ்மாவும் அதே மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் சுஷ்மாவை மீட்டனர். இதனிடையே கீழே விழுந்த குழந்தை இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையில் புகார் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பிறகு சிறுமியை கொலை செய்ததாக அவரது தாய் சுஷ்மாவை கைது செய்து விசாரித்தனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றினர்.

சுஷ்மாவை விசாரித்தபோது, மன வளர்ச்சி குன்றிய குழந்தையை தன்னால் சரிவர கவனித்து கொள்ள முடியவில்லை என்று கதறி அழுதுகொண்டே கூறியுள்ளார். அதோடு, தனது குழந்தையை ஏற்கனவே ஒரு முறை இரயில் நிலையத்தில் வேண்டுமென்றே விட்டுவிட்டு வந்ததாகவும், இதையறிந்த தனது கணவர் தன்னை அடித்து விட்டு குழந்தையை தேடி மீட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவர்மீது ஐ.பி.சி. 302-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "வீட்டுக்குள்ள தண்ணி போய்டுச்சா.. உணவு, மருந்துலாம் கிடைக்குதா?" - மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர்!